ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையத்திற்கு பாஜக தலைவர் அண்ணாமலை கடிதம்!

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் சுதந்திரமாகவும், ஜனநாயக முறையிலும் நடைபெறுவதை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும் என தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கு வரும் 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பதிவாகும் வாக்குகள் வரும் மார்ச் மாதம் 2 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்த இடைத்தேர்தலில், ஆளும் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில், காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. இதில், மறைந்த திருமகன் ஈவெராவின் தந்தை ஈவிகேஎஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். முக்கிய எதிர்க்கட்சியான அதிமுக சார்பில், முன்னாள் எம்எல்ஏ தென்னரசு போட்டியிடுகிறார்.

இந்நிலையில், ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் சுதந்திரமாகவும், ஜனநாயக முறையிலும் நடைபெறுவதை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும் என தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையத்திற்கு அண்ணாமலை எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:-

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ., திடீர் மறைவால், அந்த தொகுதிக்கு தேர்தல் கமிஷன் இடைத்தேர்தல் அறிவித்துள்ளது. ஆட்சி அமைத்து 22 மாதங்கள் ஆகியும் எந்த மக்கள் நலப்பணிகளையும் மேற்கொள்ளாத திமுக அரசு, பணம் மூலம் தேர்தலில் வெற்றி பெறலாம் என நம்புகிறது. கடந்த ஜனவரி 29 ஆம் தேதி திமுக அமைச்சர் கே.என்.நேரு மற்றும் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் பண விநியோகம் குறித்து பேசிய ஆடியோ வெளியானது. இது தொடர்பாக விரிவான தகவல்களுடன், திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக தலைவர்கள் மாநில தேர்தல் கமிஷனரிடம் மனு அளித்தனர்.

கடந்த 11 ஆம் தேதி திமுக தெற்கு யூனியன் காசாளர் சர்புதின் என்பவரது காரில் இருந்து திருப்பூரில் போலீஸ் அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் டோக்கன்களை பறிமுதல் செய்தனர். கடந்த வாரம், வாக்காளர்களுக்கு தலா 2 கிலோ இறைச்சியை லஞ்சமாக விநியோகம் செய்துள்ளனர். தொகுதியில் முகாமிட்டுள்ள திமுக அமைச்சர்கள், தொகுதியில் குறிப்பிட்ட இடத்தில் தினமும், அமரும் வாக்காளர்களுக்கு தலா ஆயிரம் ரூபாயும், தொடர்ச்சியாக 20 நாட்கள் குறிப்பிட்ட இடத்தில் அமர்ந்தால் ரூ.5 ஆயிரமும் பணம் கொடுக்க திட்டமிட்டு உள்ளனர். இது தொடர்பாக தமிழக பாஜகவினர் அளித்த புகார்களில் மாநில தேர்தல் ஆணையம் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை. திமுக அரசின் அதிகார துஷ்பிரயோகத்தை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், ஈரோட்டில் நேர்மையாகவும், சுதந்திரமாகவும் தேர்தல் நடத்த நடவடிக்கை எடுக்கும்படி பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.