பி.பி.சி. அலுவலகங்களில் வருமான வரித்துறை சர்வேக்கு சீமான் கண்டனம்!

பி.பி.சி. ஊடகத்தின் அலுவலகங்களில் வருமான வரித்துறையினரை ஏவிவிட்டு, பழிவாங்க முற்படுவதா என சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்

குஜராத் கலவரம் தொடர்பாக பிபிசி செய்தி நிறுவனம், கடந்த 17ஆம் தேதி ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டது. ‘இந்தியா- மோடிக்கான கேள்விகள்’ என்ற தலைப்பிலான அந்த ஆவணpபடத்தில் பிரதமர் மோடி குறித்து எதிர்மறையான கருத்துகள் இடம் பெற்றிருந்ததாக கூறப்படுகிறது. இந்த ஆவணப்படத்தின் 2ஆம் பாகம் கடந்த 24ஆம் தேதி வெளியானது. இதனிடையே, பிரதமர் மோடி தொடர்பாக யூ-டியூபில் வெளியான பிபிசி ஆவணப்படத்துக்கு மத்திய அரசு தடை விதித்தது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதன் தொடர்ச்சியாக, டெல்லி, மும்பையில் உள்ள பி.பி.சி நிறுவனம், அலுவலகங்களில் வருமான வரித் துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த சோதனை வருமான வரித்துறையின் சர்வே எனப்படுகிறது. வேலை நாட்களில் வேலை நேரத்தில் மட்டுமே இதுபோன்ற ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது; ஆனால், வருமானவரித்துறை சோதனையானது எந்த நாளிலும் தொடங்கி காலவரையின்றி தொடரலாம் என கூறப்படுகிறது. வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில், பி.பி.சி. ஊடகத்தின் அலுவலகங்களில் வருமான வரித்துறையினரை ஏவிவிட்டு, பழிவாங்க முற்படுவதா என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

மும்பை மற்றும் டெல்லியிலுள்ள பி.பி.சி. ஊடகத்தின் அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியிருப்பது அப்பட்டமான அதிகார முறைகேடாகும். குஜராத்தில் மோடி அரசு நிகழ்த்திய இனப்படுகொலை குறித்தான ஆவணப்படத்தை வெளியிட்டதற்கு எதிர்வினையாகப் பழிவாங்கும் போக்கோடு நிகழ்த்தப்பட்டிருக்கும் இந்நடவடிக்கை என்பது பத்திரிக்கைச் சுதந்திரத்திற்கு விடப்பட்டிருக்கும் வெளிப்படையான மிரட்டலாகும். உலகப்புகழ் பெற்ற ஊடகமான பி.பி.சி.யின் ஆவணப்படத்தை நேர்மையாக எதிர்கொள்ள திராணியற்று, எதேச்சதிகாரப்போக்கோடு அவற்றிற்குத் தடை விதித்த ஒன்றிய அரசு, தற்போது அதன் நீட்சியாக வருமானவரித்துறையினரை ஏவிவிட்டு, தனது அதிகாரப்பலத்தைக் காண்பிக்க முற்படுவது வெட்கக்கேடானது.

வருமானவரித்துறை, மத்தியப் புலனாய்வுத்துறை, மத்திய அமலாக்கத்துறை என தன்னாட்சி அமைப்புகள் யாவற்றையும் கையகப்படுத்தி, அதன்மூலம் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்களையும், சனநாயகவாதிகளையும், சமூகச்செயற்பாட்டாளர்களையும், மண்ணுரிமைப் போராளிகளையும், நேர்மையான ஊடகங்களையும் அச்சுறுத்தி வரும் ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசின் கொடுங்கோல் நடவடிக்கைகளுக்கு எனது வன்மையான கண்டனத்தையும், எதிர்ப்புணர்வையும் பதிவுசெய்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.