இயக்குநர் பா.இரஞ்சித் தடம் மாற வேண்டாம்: இயக்குநர் மோகன்.ஜி!

இயக்குநர் பா.இரஞ்சித் தடம் மாற வேண்டாம். அவர் சமூகத்தைச் சேர்ந்தவர்களின் பிரச்னையைப் பேசினால் போதும் என நினைக்கிறேன் என்று இயக்குநர் மோகன்.ஜி கூறியுள்ளார்.

திரெளபதி, ருத்ர தாண்டவம் படங்களை இயக்கிய மோகன்.ஜி தற்போது பகாசூரன் என்ற படத்தை இயக்கியுள்ளார். அதில் இயக்குநர் செல்வராகவன் நாயகனாகவும் ஒளிப்பதிவாளர் நட்டி என்னும் நடராஜ் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். சாம் சிஎஸ் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். சமூகத்தில் நடக்கும் ஒரு முக்கிய நிகழ்வை மையமாகக் கொண்டு பகாசூரன் படத்தின் கதையை அமைத்துள்ளனர். பகாசூரன் வருகிற பிப்ரவரி 17 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்நிலையில், இப்படத்தின் புரோமோஷனுக்காக நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட இயக்குநர் மோகன்.ஜியிடம் பா.இரஞ்சித் குறித்து கேள்விகேட்கப்பட்டது. அதற்கு மோகன்.ஜி, ‘பா.இரஞ்சித் தன் மக்களுக்கான உரிமையைப் பேசுகிறார். அது எனக்குப் பிடித்திருக்கிறது. சார்பட்டாவிலேயே தான் சிறந்த கலைஞர் என நிரூபித்துவிட்டார். இன்னும் அவர் பெரிய இடத்திற்கு போவார். ஆனால், நான் திரௌபதி எடுத்த காரணத்திற்காக ’நட்சத்திரம் நகர்கிறது’ படத்தை எடுத்தார். இந்த மாதிரி தடம் மாற வேண்டாம். அவர் சமூகத்தைச் சேர்ந்தவர்களின் பிரச்னையைப் பேசினால் போதும் என நினைக்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.