மழையில் நெல் மூட்டைகள் சேதம்: தமிழக அரசு விளக்கம் அளிக்க ஐகோர்ட் உத்தரவு!

நெல் மூட்டைகள் பல்வேறு மாவட்டங்களில் மழையில் நனைந்து வீணாவதாக செய்திகள் வெளியாகின்றன. இதுகுறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்த வக்கீல் ஸ்டாலின் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த பொது நல மனுவில் கூறியிருந்ததாவது:-

மதுரை மாவட்டம் மேலூரில் பருவமழை பெய்ததால் நெல் விளைச்சல் அதிகரித்துள்ளது. தற்போது அறுவடை பணி நடந்து வருகிறது. இந்நிலையில் அறுவடை செய்யக்கூடிய நெல் மூட்டைகள் அரசின் நேரடி கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு செல்வதில் காலதாமதம் ஏற்படுகிறது. இதனால் நெல் மூட்டைகளை பாதுகாப்பதற்காக நெல் கிடங்கிகள், பாதுகாப்பு மையம் இல்லை. இதனால் விவசாயிகள் மிகுந்த உழைப்பை கொடுத்து விளைவித்த நெல் மணிகள் வெயிலிலும், மழையிலும் நனைந்து வீணாகி விடுகின்றன. இதனால் விவசாயிகளுக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்படுகிறது. எனவே மதுரை மாவட்டம் மேலூர் தாலுகாவில் நெல் கிடங்கு பாதுகாப்பு மையம் அமைக்க உத்தரவிடக்கோரி அதிகாரிகளிடம் மனு அளித்தேன். எந்தவித நடவடிக்கையும் இல்லை. எனது மனுவின் அடிப்படையில் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விக்டோரியா கவுரி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், நெல் மூட்டைகள் பல்வேறு மாவட்டங்களில் மழையில் நனைந்து வீணாவதாக செய்திகள் வெளியாகின்றன. அந்த இடங்களில் எல்லாம் தற்போதைய நிலை என்ன என கேள்வி எழுப்பினர். மேலும் இதுகுறித்து அரசு தரப்பில் உரிய விளக்கம் அளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.