முதல்வர் பினராயி விஜயனின் குடும்பமே மோசடியில் ஈடுபட்டது: ஸ்வப்னா சுரேஷ்!

கேரள அரசின் லைஃப் மிஷன் திட்டத்தில் முதல்வர் பினராயி விஜயனின் குடும்பமே மோசடியில் ஈடுபட்டதாக ஸ்வப்னா சுரேஷ் குற்றம்சாட்டியுள்ளார்.

கேரள மாநில அரசியலில் பெரும் புயலை கிளப்பியது தங்கக் கடத்தல் வழக்கு. திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரகத்தின் பெயரை பயன்படுத்தி வெளிநாட்டில் இருந்து தங்கம் கடத்தப்பட்டு வந்துள்ளது. இதுதொடர்பாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் விசாரணையில் இறங்கினர். கடந்த 2022ஆம் ஆண்டு தூதரக முகவரிக்கு செல்வதற்காக காத்திருந்த 30 கிலோ தங்கம் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் பிடிபட்டது. இதன் பின்னணியில் விசாரித்தால் கேரள அரசின் தகவல் தொழில்நுட்பத் துறையில் ஒப்பந்த பணியாளராக இருந்த ஸ்வப்னா சுரேஷ் மற்றும் அவரது கூட்டாளிகளான சந்தீப் நாயர், ஃபைசல் பரீத் உள்ளிட்டோர் சிக்கினர். 15க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில் முக்கிய குற்றவாளியான ஸ்வப்னா சுரேஷை சுங்கத்துறை, அமலாக்கத்துறை, என்.ஐ.ஏ என மாறி மாறி விசாரித்தது. இதில் பல ஆண்டுகளாக நடந்து வரும் தங்கக் கடத்தல் தெரியவந்தது.

இந்நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயனின் முதன்மை செயலாளராக இருந்த சிவசங்கருக்கு தொடர்பிருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியானது. அதன்பிறகு முதல்வரின் அலுவலகத்தில் பலரிடம் விசாரணை நடத்தப்பட்டது. ஸ்வப்னா சுரேஷ் முன்வைத்த குற்றச்சாட்டு முதல்வர் பினராயி விஜயன் வரை நீண்டது. இதற்கிடையில் சிவசங்கர் கைது செய்யப்பட்டு பலகட்ட விசாரணை நடத்தினர். தற்போது ஜாமீனில் வெளியே இருக்கிறார். இதேபோல் ஸ்வப்னா சுரேஷிற்கும் ஜாமின் கிடைத்தது.

இந்நிலையில் ஸ்வப்னா சுரேஷ் செய்தியாளர்களிடம் பேசுகையில், கேரள அரசின் லைஃப் மிஷன் திட்டத்தில் மிகப்பெரிய அளவில் முறைகேடு நடந்துள்ளது. இதில் முதல்வர் பினராயி விஜயனின் ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் தொடர்பிருக்கிறது. எனவே மக்கள் முன்பு உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும். புதிய திட்டங்கள் என்ற பெயரில் மக்களின் வரிப் பணத்தை அபகரிக்க பார்க்கிறார்கள். நிர்வாக ரீதியிலான அனைத்து விஷயங்களையும் சிவசங்கர் சரிகட்டி விட்டார். அதனால் தான் லைஃப் மிஷன் திட்டத்தில் முறைகேடு நடந்திருக்கிறது. தற்போது அமலாக்கத்துறை சரியான பாதையில் சென்று வருகிறது. அவர்களுக்கு தேவையான ஆதாரங்களை அளித்து உதவி செய்ய நான் தயாராக இருக்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.