படித்தவர்கள், பாமரர்கள் என அனைவரையும் ஏமாற்றி ஆட்சிக்கு வந்தது தி.மு.க. என்று எடப்பாடி பழனிசாமி ஈரோடு தேர்தல் பிரசாரத்தின்போது ஆவேசமாக கூறினார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் கே.எஸ்.தென்னரசுவுக்கு வாக்கு கேட்டு முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 3-வது நாளாக நேற்று ஈரோட்டில் பிரசாரம் செய்தார். கருங்கல்பாளையம் ராஜகோபால் தோட்டம் முதல் சூரம்பட்டி நால்ரோடு வரை பிரசாரத்தில் ஈடுபட்டு இரட்டை இலை சின்னத்துக்கு அவர் ஆதரவு திரட்டினார். அவர் ராஜகோபால் தோட்டம் பகுதியில் பேசியதாவது:-
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அ.தி.மு.க. ஆட்சியில் 10 ஆண்டுகளில் எந்த திட்டமும் செய்யவில்லை என்று பச்சை பொய் கூறுகிறார். 21 மாத ஆட்சியில் தி.மு.க. ஈரோடு கிழக்கு தொகுதியில் ஒரு பணி கூட செய்யவில்லை. அமைச்சர்கள் வீதி வீதியாக வந்து வாக்காளர்களுக்கு ரூ.1000, ரூ.2000 என்று கொடுக்கிறார்கள். தேர்தல் ஆணையம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஏமாற்றி ஆட்சிக்கு வந்தது நான் முதல்-அமைச்சராக இருந்தபோது 110 விதியின் கீழ் 5 லட்சம் முதியோருக்கு உதவித்தொகை வழங்க உத்தரவிட்டு 90 சதவீதம் பேருக்கு வழங்கினேன். ஆனால் 21 மாத தி.மு.க. ஆட்சியில் 7 லட்சம் முதியோருக்கு உதவித்தொகை நிறுத்தப்பட்டு உள்ளது.
10 ஆண்டுகளில் 53 லட்சம் மாணவ-மாணவிகளுக்கு மடிக்கணினி கொடுத்தோம். அதை தி.மு.க. அரசு நிறுத்தி விட்டது. அம்மா 2 சக்கர வாகனம் வழங்கும்திட்டம், தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் என்று அ.தி.மு.க. திட்டங்களை நிறுத்தி விட்டனர். மின்கட்டணம் 54 சதவீதம் உயர்த்தி விட்டனர். இன்னும் 4 ஆண்டுகளில் 24 சதவீதம் உயரும். வீட்டு வரி, கடைவரி என அனைத்தும் உயர்ந்து விட்டது. இப்படி படித்தவர்கள், பாமரர்கள் என்று அனைவரையும் ஏமாற்றி ஆட்சிக்கு வந்தது தி.மு.க., எனவே இந்த தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு வாக்களியுங்கள் என்றார்.
வில்லரசன் பட்டியில் அதிமுக வேட்பாளர் கே.எஸ் தென்னரசுவிற்கு வாக்கு கேட்டு இஸ்லாமியர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் கூட்டமைப்பினர் முன் எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது பாஜகவுடன் கூட்டணி வைத்து இருப்பது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி விளக்கம் கொடுத்தார். அவர் கூறியதாவது:-
ஒரு கட்சியுடன் கூட்டணி வைக்கிறோம் என்றால் அவர்களின் கொள்கையை ஏற்றுக்கொண்டோம் என்று அர்த்தம் ஆகிவிடாது. நாங்கள் யாருடன் கூட்டணி வைத்தாலும் எங்களின் கொள்கை மாறிவிடாது. எங்கள் கொள்கை அப்படியேத்தான் இருக்கும். அதில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு கட்சி இன்னொரு கட்சியுடன் கூட்டணி வைக்கும் போது கொள்கையை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று அர்த்தம் இல்லை. நாங்கள் எங்கள் கூட்டணியில் உறுதியாக இருக்கிறோம். வாக்குகள் சிதற கூடாது என்றுதான் நாங்கள் கூட்டணி வைக்கிறோம். நாங்கள் சிறுபான்மையினருக்கு ஆதரவாக இல்லை என்று சிலர் வாதம் வைக்கிறார்கள். எங்களுக்கு எதிராக தவறாக வாதம் வைக்கிறார்கள். வாக்குகள் சிதற கூடாது என்பதால் கூட்டணி வைக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறோம். இதனால் நாங்கள் கொள்கையை விட்டுக்கொடுத்துவிட்டோம் என்று கூற முடியாது. எங்களுக்கு வாக்களிக்கும் சிறுபான்மையினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தும் விதமாக சிலர் தவறான பிரச்சாரங்களை செய்கிறார்கள், கூட்டணி வைப்பதால் ஒரு கட்சி சொல்வதை நாங்கள் கேட்போம் என்று நீங்கள் நினைக்கவேண்டாம். தமிழ்நாட்டில் சிறுபான்மையினர், தமிழா் உரிமையை பாதுகாக்க நாங்கள் கடுமையாக போராடி வருகிறோம். இதற்காக நாங்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம் என்பதை மக்கள் பார்க்க வேண்டும். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.