ஆகம விதிக்கு முரணாக, குமாரவயலூர் கோவிலில் நியமிக்கப்பட்ட அர்ச்சகர்களின் நியமன உத்தரவை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.
ஸ்ரீரங்கம், குமாரவயலூர், சுப்ரமணியசுவாமி திருக்கோவிலில் தமிழ்நாடு அரசு அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்தின் கீழ்ஜெயபாலன், மற்றும் பிரபு ஆகியோரை அர்ச்சகர்களாக நியமித்ததை ரத்து செய்து, நீண்ட காலமாக பணியாற்றும் தங்களை அர்ச்சகர்களாக நியமிக்க கோரி கார்த்திக் மற்றும் பரமேஸ்வரன் ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், “குமாரவயலூர், சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் பிரபு, ஜெயபாலன் ஆகியோர் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். பிரபு மற்றும் ஜெயபாலன் ஆகியோர் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டது குறித்தே மனுதாரர்கள் கேள்வி எழுப்பி மனுக்களைத் தாக்கல் செய்திருக்கிறார்கள். மனுதாரர்களும் அர்ச்சகர் பணிக்கு விண்ணப்பித்த நிலையில் அவர்கள் தேர்வு செய்யப்படவில்லை. அர்ச்சகர்களாக தேர்வு செய்யப்பட்டவர்கள் தரப்பில், “2021 ஆம் ஆண்டு தங்களை அர்ச்சர்களாக நியமித்த நிலையில், 2022 செப்டம்பர் மாதம் தான் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்கு தாமதமாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆகவே இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்கக் கூடாது” என வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த வழக்கை பொருத்தவரை மனுதாரர்கள் பல ஆண்டுகளாக அர்ச்சகர்களாக கோவிலில் பணியாற்றி வந்துள்ளனர். அவர்கள் கோவில் அறங்காவலரால் முறையாக நியமிக்கப்படவில்லை என்றாலும், தமிழகத்தில் நூற்றுக்கணக்கான கோவில்களில் பல அர்ச்சகர்கள் ஊதியம் பெறாமலேயே, கோவில்களில் தங்களின் பணியை செய்து வருகின்றனர்.
அந்த வகையில், ஆகம விதிகளுக்கு எதிராக குமாரவயலூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் நடைபெற்ற அர்ச்சகர் நியமன உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. இந்த கோவிலில் அர்ச்சகர்களாக பல ஆண்டுகளாக பணியாற்றிய, மனுதாரர்களையே அர்ச்சகர்களாக நியமிப்பது தொடர்பாக கோவிலின் அறங்காவலர், எட்டு வாரங்களுக்குள்ளாக பரிசீலித்து உரிய முடிவெடுக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
