ரஷ்யாவின் ஸ்புட்னிக் கொரோனா தடுப்பூசி கண்டுபிடித்த விஞ்ஞானி கொலை!

ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசியை கண்டுபிடித்த விஞ்ஞானிகளில் ஒருவரான ஆன்ட்ரி போடிகோவ், அவரது குடியிருப்பில் கழுத்து நெறித்துக் கொலை செய்யப்பட்டார். அவர் குடியிருந்த அடுக்குமாடிக் குடியிருப்பில், பெல்ட்டால் கழுத்து நெறித்துக் கொலை செய்யப்பட்ட நிலையில், கொலையாளி என சந்தேகிக்கப்படும் நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

47 வயதாகும் போடிகோவ், கமலேயா தேசிய ஆராய்ச்சி மையத்தின் சூழலியல் மற்றும் கணிதவியல் துறையின் மூத்த விஞ்ஞானியாக பணியாற்றி வந்தார். அவர் குடியிருந்த அடுக்குமாடிக் குடியிருப்பு வீட்டில் வியாழக்கிழமை அவரது உடல் கொலை செய்யப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த 2021ஆம் ஆண்டு இவருக்கு சிறந்த விஞ்ஞானிக்கான விருது வழங்கப்பட்டது. கொரோனா பேரிடர் காலத்தில் 2020ஆம் ஆண்டு ரஷ்ய நாட்டுக்காக ஸ்புட்னிக் வி என்ற கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்த 18 விஞஞானிகளில் போடிகோவும் ஒருவர்.

முதற்கட்ட விசாரணையில், 29 வயது இளைஞர், போடிகோவுடன் நடந்த வாக்குவாதத்தின் போது ஒரு பெல்ட்டால் கழுத்தை நெறித்துக் கொலை செய்துவிட்டு தப்பியோடியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட இளைஞர் குற்றத்தை ஒப்புக் கொண்டதாகவும், அவர் மீது மிக மோசமான குற்ற வழக்குகள் நிலுவையில் இருக்கிறது என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.