வடமாநிலத்தவர் குறித்து வதந்தி பரப்பிய பாஜக செய்தி தொடர்பாளர் பிரசாந்த் உம்ராவ் முன் ஜாமின் மனு!

தமிழகத்தில் வடமாநிலத்தவர்கள் கொல்லப்படுவதாக வதந்தி பரப்பிய உத்தரபிரதேச பாஜக செய்தி தொடர்பாளர் பிரசாந்த் உம்ராவ் முன் ஜாமீன் கோரி மனுத்தாக்கள் செய்துள்ளார்.

இந்தி பேசியதற்காக வடமாநில தொழிலாளர்கள் 15 பேர் தமிழ்நாட்டில் கழுத்தறுத்துக் கொல்லப்பட்டதாக பொய் செய்தி பரப்பப்பட்டது. இந்த செய்தி வடமாநில உள்ளூர் ஊடகங்களிலும் வெளியானது. அதேபோல் பாஜக பிரமுகர்களும் இந்த போலிச் செய்தியை சமூகவலைதளங்களில் பரப்பி ட்ரெண்ட் ஆக்கினர். இது வட இந்திய மாநிலங்களில் கொதிநிலையை ஏற்படுத்தியதோடு மட்டுமில்லாமல், தமிழ்நாட்டின் மீது வெறுப்பு ஏற்படுத்த காரணமாகியது. மேலும் பீகார் சட்டப்பேரவையில் பாஜகவினர் இது குறித்து பேசி அமலியில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், தமிழக உயர் அதிகாரிகளிடம் பேசினார். அதைத் தொடர்ந்து பீகார் அதிகாரிகள் குழு தமிழகத்திற்கு வருகை தந்து ஆய்வில் ஈடுபட்டது. அதேபோல் இந்தி பேசும் மாநிலங்களில் பிரபலமாக கொண்டாடப்படும் ஹோலி பண்டிகைக்காக, தமிழகத்தில் இருக்கும் வடமாநில தொழிலாளர்கள் ரயில் நிலையத்தில் குவிந்தது குறித்தும் அவர்கள் அச்சத்தில் தமிழ்நாட்டை விட்டு வெளியேறுவதாக பொய் செய்தி பரப்பபட்டது.

இந்த விவகாரம் நாடு முழுவதும் பேசு பொருளானது. தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின் பிறந்தநாள் விழாவில், இந்தி பேசும் மாநிலங்களில் செல்வாக்குள்ள உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், பீகார் முதல்வர் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் கலந்து கொண்ட அடுத்த இரண்டு நாட்களில் காட்டுத் தீயாய் இந்த போலிச் செய்தி திட்டமிட்டு பரப்பரப்பட்டது. முக ஸ்டாலின் பிறந்தநாள் விழாவில் 2024 நாடாளுமன்ற தேர்தலில் எதிர்கட்சிகளின் கூட்டணி உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து, அதை உடைக்க பாஜக செய்த பக்கா ப்ளான் தான் போலி செய்திகளை பரப்பியது என்பது அரசியல் விமர்சகர்களின் கருத்தாக உள்ளது. இதன் மூலம் கூட்டணியில் விரிசல் ஏற்படவும், இந்தி மாநில வாக்காளர்களை கவரவும் பாஜகவினர் திட்டம்போட்டதாக கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து போலிச் செய்திகளை பரப்பிய நபர்கள் மீது ஜாமீனில் வெளிவராத பிரிவுகளின் கீழ் தமிழ்நாடு காவல்துறை வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைக்கப்பட்டது. மேலும் வதந்திகளை பரப்பிய நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

இந்தநிலையில் வடமாநிலத்தவர் குறித்த போலி செய்தியை பரப்பியவர்களில் முதன்மையானவர் உத்தரபிரதேச பாஜக செய்தி தொடர்பாளர் பிரசாந்த் உம்ராவ். அவரை கைது செய்ய டெல்லி விரைந்தது தமிழக காவல்துறையின் தனிப்படை. அதைத் தொடர்ந்து பிரசாந்த் உம்ராவ் தலைமறைவானார். இந்த நிலையில் பாஜக செய்தி தொடர்பாளர் பிரசாந்த் உம்ராவ் முன் ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். பிரசாந்த் உம்ராவ் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனு டெல்லி உயர்நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது. “பொய் செய்திக்கு நான் பலிகடா ஆகிவிட்டேன். வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் நான் பதிவு செய்யவில்லை. பாஜகவைச் சேர்ந்தவர் என்பதால் உள்நோக்கத்துடன் என் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. புலம்பெயர் தொழிலாளர்களின் நிலை தொடர்பாக எனது பகிர்ந்து கொள்வதற்காக ட்வீட் செய்தேன். ஊடகங்கள் பிரபலங்கள் வெளியிட்ட செய்தியை பகிர்ந்தேன், அது போலியானது என தெரிந்த உடனே நீக்கிவிட்டேன்’’ என பிரசாந்த் உம்ராவ் தனது முன் ஜாமீன் மனுவில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தமிழ்நாட்டில் வடமாநிலத்தவர்கள் கொல்லப்படுவதாக பொய் செய்தியை பரப்பிய பீகார் நபரை போலீசார் கைது செய்துள்ளனர். தமிழ்நாட்டில் வடமாநிலத்தவர்கள் தாக்கப்படுவதாக போலி வீடியோக்களை வெளியிட்டு வதந்திப் பரப்பியதற்காக, பிகார் மாநிலத்தின் ஜமூன் மாவட்டத்தைச் சேர்ந்த அமன்குமார் என்பவரை அம்மாநில காவல்துறையினர் கைது செய்தனர். போலி வீடியோக்களை நீக்க டுவிட்டர், பேஸ்புக், யூடியூப் நிறுவனங்களுக்கு பீகார் காவல்துறை கடிதம் எழுதியுள்ளது. மேலும் திட்டமிட்டு வதந்தி பரப்பப்பட்டுள்ளது என அம்மாநில காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.