பிகார் மாநிலம் கயாவில் ராணுவ பயிற்சியின் போது குண்டு வெடித்து 3 பேர் பலி!

பிகார் கயா பகுதியில் ராணுவத்தினர் நடத்திய பயிற்சியில் ஷெல் குண்டு வீட்டுக்குள் பாய்ந்து 3 பேர் உயிரிழந்தனர். குலர்வெத் கிராமத்தில் உள்ள வீட்டுக்குள் ஷெல் குண்டு பாய்ந்ததில் 3 பேர் பலியாகிய நிலையில் பலர் படுகாயமடைந்துள்ளனர்.

பிகார் மாநிலம் கயா மாவட்டத்தில் இன்று ராணுவ பயிற்சியின் போது இலக்குத் தவறி வெடிகுண்டு வெடித்ததில் 3 பேர் பலியாகினர் மற்றும் ஆறுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இச்சம்பவத்தை உறுதி செய்த பாரசட்டி காவல் நிலைய அதிகாரி, மாவட்டத்தில் உள்ள பாரசட்டி காவல் நிலையத்திற்குட்பட்ட குபேர் பிண்ட் கிராமத்தில் ராணுவ பயிற்சியின் போது காலை 8.30 மணியளவில் இந்த சம்பவம் நடந்ததாக தெரிவித்தார்.

காயமடைந்தவர்கள் கயாவில் உள்ள மகத் மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தையடுத்து ஆத்திரமடைந்த கிராம மக்கள் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.