கிராமங்களில் உள்ள விளையாட்டு மைதானங்களை மேம்படுத்த ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு?: தயாநிதி மாறன்

கடந்த ஐந்தாண்டுகளில் தமிழ்நாடு உட்பட அனைத்து மாநிலங்களிலும் விளையாட்டு மைதானங்களை மேம்படுத்த மேம்படுத்த ஒன்றிய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி கேள்வி எழுப்பினார்.

மக்களவையில் ஒன்றிய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகத்திடம் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் எழுப்பிய கேள்விகள் வருமாறு:-

கடந்த ஐந்தாண்டுகளில் தமிழ்நாடு உட்பட அனைத்து மாநிலங்ளிலும் விளையாட்டு மைதானங்கள் மற்றும் உள்விளையாட்டு அரங்குகளின் உட்கட்டமைப்புகளை மேம்படுத்த ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு என்பதை ஆண்டு மற்றும் மாநிலங்கள் வாரியாக பட்டியலிட்டு தெரியப்படுத்தவும். மாநிலங்களில் விளையாட்டுத்துறைக்காக அமல்படுத்தப்பட்ட புதிய திட்டங்களின் விவரங்கள், அதற்காக தரப்பட்ட நிதி மற்றும் அத்திட்டங்களின் விவரம்.

அனைத்து மாநிலங்களிலும் புதிய விளையாட்டு வளாகங்களை அமைப்பது குறித்து ஒன்றிய அரசு ஏதேனும் முன்மொழிகிறதா என்றும், அவ்வாறெனில் அத்திட்டம் குறித்த தெளிவான விளக்கங்களையும் அதற்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ள இடங்களின் விவரங்களையும் தெரியப்படுத்தவும். விளையாட்டு வளாகத்திற்கான மாநிலத் திட்டம் குறித்தும், அத்திட்டத்திற்காக ஆகும் செலவினம் விவரம் தருக. தமிழ்நாட்டின் கிராமப்புறங்களில் விளையாட்டு உட்கட்டமைப்புகளை மேம்படுத்த அமைச்சகம் மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன என்றும் அவ்வாறு மேம்படுத்தப்பட்ட வசதிகளை விளையாட்டு வீரர்கள் எளிதில் அணுகி பயிற்சி பெற முடிகிறதா என்பதை எவ்வாறு உறுதி செய்கிறீர்கள் என்றும் கேள்வி எழுப்பினார்.