வைரஸ் காய்ச்சல்: புதுச்சேரி, காரைக்காலில் 8-ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை!

வைரஸ் காய்ச்சலின் பரவல் அதிகரித்துள்ளதால் புதுச்சேரி, காரைக்காலில் ஒன்று முதல் 8-ஆம் வகுப்பு வரை மார்ச்16 முதல் 26-ம் தேதி வரை பள்ளிகள் விடுமுறை விடப்பட்டுள்ளது.

இந்தியாவில் புதிய வகை வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது இன்புளுயன்சா ஏ வைரஸின் துணை வைரசான இந்த வைரஸ் எச்3என்2 என அழைக்கப்படுகிறது. இந்த புதிய வகை வைரஸ் 15 வயதுக்கு உள்பட்ட குழந்தைகள் மற்றும் முதியோரைதான் அதிகம் தாக்கும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக குழந்தைகள் அதிகளவில் பாதிக்கப்படுவதால் பள்ளிகளுக்கு விடுமுறை விடவேண்டும் என்று புதுவை சட்டப்பேரவையில் கோரிக்கை விடப்பட்டிருந்தது.

இந்நிலையில் புதுச்சேரி சட்டப்பேரவையில் கல்வியமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு வெளியிட்டார். அதில், புதுச்சேரியில் வைரஸ் தொற்று பரவி குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய நான்கு பிராந்தியங்களிலும் ஆரம்ப பள்ளி முதல் 8-ம் வகுப்பு வரை அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள் வரும் 16 முதல் 26 வரை விடுமுறை விடப்படுகிறது என்று அறிவித்தார்.