அரசு பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களுக்கு ஜூன் மாதம் தேர்வு: அன்பில் மகேஷ்

அரசு பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களுக்கு ஜூன் மாதம் தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.

தஞ்சாவூரில் செய்தியாளர்களை சந்தித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியதாவது:-

அ.தி.மு.க. ஆட்சியில் 10 ஆண்டுகளாக தாலிக்கு தங்கம் திட்டத்தை முறையாக செய்யாமல் விட்டுவிட்டார்கள். இதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று பார்த்தபோது 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் பெண் குழந்தைகள் கல்வி அறிவு பெற, அவர்களை ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காக கல்லூரி மாணவிகளுக்கு மாதந்தோறும் புதுமைப்பெண் திட்டத்தில் ரூ.1,000 வழங்கி வருகிறோம். தாலிக்கு தங்கம் திட்டத்தில் பயன்பெறுவதை காட்டிலும் புதுமைப்பெண் திட்டத்தில் பெண் குழந்தைகள் அதிகம் பயன்பெறுகிறார்கள் என்பதை உறுதி செய்ய முடிகிறது. பெண் குழந்தைகள் எதிர்காலத்தில் சொந்தகாலில் நிற்க வேண்டும் என்பதற்கு கல்வி அறிவு எவ்வளவு முக்கியம் என்பதை பறைசாற்றும் வகையில் தான் இந்த திட்டத்தை செயல்படுத்தி இருக்கிறோம். இதற்கு பெரிய வரவேற்பு உள்ளது.

பொதுத் தேர்வு வரும்போது மாலை நேரத்தில் மாணவர்களுக்கு ஒரு மணிநேரம் பயிற்சி அளிக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் அதிநவீன ஆய்வகம் மூலம் மாணவர்களுக்குப் பயிற்சி அளித்து வருகிறோம். இருந்தாலும், நம் மாணவர்கள் எந்த வகையிலும் ஏமாந்துவிடக் கூடாது என்பதற்காக நீட் தேர்வுக்கான பயிற்சியும் அளிக்கப்படுகிறது.

கடந்த 2021-22-ஆம் கல்வியாண்டில் இடைநிற்றல் மாணவர்களின் எண்ணிக்கை 1.90 லட்சமாக இருந்தது. இடைநிற்றல் குழந்தைகளைக் கண்டுபிடித்து நிகழ் கல்வியாண்டில் சேர்த்தும், அவர்கள் ஓரிரு நாட்கள் வந்து, மற்ற நாள்கள் வரவில்லை என்றாலும், அவர்களை நீக்குமாறு நாங்கள் அறிவுறுத்தவில்லை. அவர்களுக்கு ஏதாவது ஒரு விதத்தில் கல்வி தொடர்பு இருக்க வேண்டும் என்பதற்காக அவர்களை விட்டுவிடாமல், தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு வழங்குமாறு அறிவுறுத்துகிறோம். அவர்களைப் படிக்க வைக்க வேண்டும் என்பதுதான் அரசின் நோக்கம். இடைநிற்றலான 1.90 லட்சம் மாணவர்களை அடையாளம் கண்டு நிகழ் கல்வியாண்டில் சேர்க்கவில்லை என்றால், இத்தேர்வில் 6.60 லட்சம் முதல் 6.70 லட்சம் பேர்தான் எழுதுவர். ஆனால், இப்போது 8.81 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர். ஆண்டுதோறும் தேர்வுக்கு வராத மாணவர்களின் எண்ணிக்கை 4.5 முதல் 4.6 சதவிகிதமாக இருப்பது வழக்கம். இது நிகழாண்டில் 5 சதவிகிதம் வரை வந்துள்ளது. இது தொடர்பாக அதிக கவனம் செலுத்த வேண்டும் எனக் கல்வித் துறை அலுவலர்களிடம் கூறியிருக்கிறோம். மேலும், இதற்காக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் இணையவழியில் கூட்டம் நடத்தவுள்ளேன். இதற்கான காரணத்தையும் கண்டறியுமாறும் அறிவுறுத்தியுள்ளோம்.

அடுத்து 10ம் வகுப்புத் தேர்வு தொடங்கப்படவுள்ளதால், அதற்கான ஆயத்தப் பணியும் தொடங்கிவிட்டோம். மாணவர்கள் அச்சப்படாமல் பொதுத் தேர்வு எழுதுவது தொடர்பாக, அறிவுரைகள் வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நிகழாண்டு பொதுத் தேர்வுக்கு வராதவர்களுக்கும், தேர்வில் பங்கேற்று எழுதி தேர்ச்சி பெறாதவர்களுக்கும் தனியாகச் சிறப்பு வகுப்புகள் நடத்தி, அவர்களை ஊக்கப்படுத்தி, வரும் ஜூன் மாதம் நடைபெறும் உடனடித் தேர்வில் பங்கேற்கச் செய்ய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.
தேர்வுக்கு வராதவர்களின் எண்ணிக்கை குறைய வேண்டும் என்பதற்காக முதல்வரும் நடவடிக்கை எடுத்து வருகிறார். இந்த நிலைமை படிப்படியாகக் குறையும் என்ற நம்பிக்கை உள்ளது. அனைத்து மாணவர்களும் தேர்வு எழுத வேண்டும் என்பது தான் எங்களது நோக்கம். அதை சரி செய்ய வேண்டிய பொறுப்பு பள்ளிக்கல்வித்துறைக்கு உள்ளது. அதை படிப்படியாக செய்வோம். இவ்வாறு அவர் கூறினார்.