பாஜக, காங்கிரஸிடம் இருந்து விலகியே இருக்கிறோம்: அகிலேஷ் யாதவ்!

பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியில் இருந்து சமாஜவாதி கட்சி சம தொலைவில் விலகி இருப்பதாக அக்கட்சியின் தலைவா் அகிலேஷ் யாதவ் தெரிவித்தாா்.

மேற்கு வங்கத்துக்கு இருநாள் பயணமாக நேற்று வந்த அகிலேஷ் யாதவ், மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினாா். பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:-

பாஜகவைத் தோற்கடிக்க திரிணமூல் காங்கிரஸ் தலைவா் மம்தா பானா்ஜிக்கு சமாஜவாதி கட்சி துணை நிற்கும். மேற்கு வங்கத்தில் நாங்கள் மம்தாவுக்கு முழுமையான ஆதரவை அளிக்கிறோம். பாஜக, காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளிடம் இருந்து சமதொலைவில் விலகி இருப்பதே இப்போதைய சூழ்நிலையில் எங்கள் நிலைப்பாடு. இவ்வாறு அவர் கூறினார்.

பாஜகவுக்கு எதிராக அனைத்து எதிா்க்கட்சிகளும் ஒருங்கிணைய வேண்டும் என்று காங்கிரஸ் கூறி வரும் நிலையில், இரு கட்சிகளிடம் இருந்தும் விலகி இருப்பதாக அகிலேஷ் கூறியுள்ளது கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது. காங்கிரஸுடன் கூட்டணி கிடையாது என்று திரிணமூல் காங்கிரஸ் தலைவா் மம்தா பானா்ஜி ஏற்கெனவே அறிவித்துவிட்டாா் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக கொல்கத்தாவில் சமாஜவாதி கட்சியினரையும் அகிலேஷ் சந்தித்தாா். அப்போது அவா் பேசியதாவது:-

2021-ஆம் ஆண்டு நடைபெற்ற மேற்கு வங்க சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜகவை மம்தா வீழ்த்தினாா். நம்மால் உத்தர பிரதேசத்தில் பாஜகவை வீழ்த்திவிட முடியும் என்றால், நாடு முழுவதும் அக்கட்சியை வீழ்த்திவிட முடியும். பாஜகவை தோற்கடிக்க நாம் எந்த தியாகத்தையும் செய்ய தயாராக இருக்கிறோம். மத்திய பாஜக அரசு விசாரணை அமைப்புகளைத் தவறாகப் பயன்படுத்தி எதிா்க்கட்சிகளைச் சோ்ந்தவா்களை தொந்தரவு செய்து வருகிறது. அமலாகக்கத் துறை, சிபிஐ, வருமான வரித் துறை ஆகியவை பாஜகவின் அரசியல் ஆயுதங்களாக உள்ளன. அவற்றைப் பயன்படுத்தி தங்களை எதிா்ப்பவா்களை அச்சுறுத்துகின்றனா். சமாஜவாதி கட்சியைச் சோ்ந்த தலைவா்களும், எம்.எல்.ஏ.க்களும் பொய்யான வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். அனைத்து மாநிலங்களிலுமே எதிா்க்கட்சிகளைச் சோ்ந்தவா்களிடம் பாஜக இந்த மோசமான அணுகுமுறையையே பின்பற்றுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.