நான் அரசியல் வாழ்க்கையை விட்டே விலகிவிடுவேன்: பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்!

மகளிருக்கான ரூ.1000 உரிமைத் தொகை திட்டத்தை விமர்சித்த நபர் கைது செய்யப்பட்டு இருப்பதற்கு பிடிஆர் காரணம் என்று சவுக்கு சங்கர் தெரிவித்து இருந்த நிலையில், அவரது விமர்சனம் தன்னை தொல்லை செய்யும்போது அரசியலை விட்டே விலகி விடுகிறேன் என்று தெரிவித்து உள்ளார்.

கடந்த திங்கள் கிழமை சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்த நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், ரூ.1000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் குறித்த அறிவிப்பை வெளியிட்டது பல்வேறு தரப்பிலிருந்து வரவேற்புகளை பெற்றது. திமுகவின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற இந்த வாக்குறுதி பெண்கள் உட்பட பல்வேறு தரப்பினரை மகிழ்ச்சியடைய செய்து இருக்கும் நிலையில் எதிர்க்கட்சிகள் இதனை விமர்சித்து வருகின்றனர். சிலர் ஒரு படி மேலேபோய் நிதியுதவி பெறும் பெண்களை தரக்குறைவாக விமர்சித்தனர்.

இந்த நிலையில் இந்த அறிவிப்பை விமர்சிக்கும் வகையில் செந்தில், கவுண்டமணி நகைச்சுவை வைத்து முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் பிடிஆரை விமர்சிக்கும் வகையில் மீம் வீடியோ ஒன்றும் பகிரப்பட்டது. இதனை பகிர்ந்த வாய்ஸ் ஆப் சவுக்கு என்ற டுவிட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிட்ட அதன் அட்மின் பிரதீப் கைது செய்யப்பட்டு இருக்கிறார். இதுகுறித்து டுவிட்டரில் பதிவிட்ட சவுக்கு சங்கர், “நிதியமைச்சர் பிடிஆர் முதலமைச்சர் மற்றும் காவல்துறையினர் வாய்ஸ் ஆப் சவுக்கு அட்மினை கைது செய்யுமாறு வலியுறுத்தி இருக்கிறார். இந்த பற்றாகுறை பட்ஜெட்டை யாரும் விமர்சிக்கக் கூடாது என அவர் நினைக்கிறார். அரசை நினைத்து வெட்கப்படுகிறேன்” என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து டுவிட்டரில் விளக்கம் கொடுத்துள்ள பிடிஆர், “இந்த கற்பனைவாதியின் குழப்பங்களை நான் புறக்கணித்துவிட்டேன். இது 100% பைத்தியக்காரத்தனமான கருத்து என்பதால் இது பற்றி விளக்கம் கொடுக்கிறேன். அந்த டுவிட்டர் கணக்கு பற்றி எனக்கு தெரியாது. நான் அந்த வீடியோவை பார்க்கவும் இல்லை புகாரளிக்கவும் இல்லை. இடைநீக்கம் செய்யப்பட்ட டி.வி.ஏ.சி எழுத்தாளரால் (சவுக்கு சங்கரை குறிப்பிடுகிறார்) சுமத்தப்படும் மாநில அரசின் பட்ஜெட் மீதான விமர்சனங்கள் என்னை ஒருவேளை அசைத்து பார்த்தது என்றால், நான் அரசியல் வாழ்க்கையை விட்டே விலகிவிடுவேன்” என்று கூறியுள்ளார்.