நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் குல தெய்வ கோவிலில் வழிபாடு!

நடிகை நயன்தாராவும் இயக்குநர் விக்னேஷ் சிவனும் திடீரென குல தெய்வ கோவிலில் வழிபாடு செய்துள்ளனர்.

பிரபல நடிகையான நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவனை கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டார். 7 ஆண்டுகளுக்கும் மேலாக காதலித்து வந்த விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் ஏற்கனவே பதிவு திருமணம் செய்த நிலையில் கடந்த ஜூன் மாதம் ஊர் அறிய திருமணம் செய்தனர். அவர்களின் திருமணம் தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் இந்தி சினிமா பிரபலங்கள் பலரும் பங்கேற்றனர். இதனை தொடர்ந்து சினிமாவில் பிஸியாக இருந்த விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் கடந்த அக்டோபர் மாதம் வாடகைத்தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றனர். சமீபத்தில்தான் தங்களின் குழந்தைகளில் பெயர்களை அறிவித்தனர் விக்னேஷ் சிவனும் நயன்தாராவும். அதன்படி தங்களின் மகன்களுக்கு உயிர் ருத்ரோநீல் N சிவன், உலக் தெய்விக் N சிவன் என பெயர் வைத்துள்ளது தெரிய வந்துள்ளது. இந்த பெயர்கள் கடவுளைக் குறிக்கும் வகையில் வைக்கப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது. இருப்பினும் நயன்தாரா விக்னேஷ் சிவன் பிள்ளைகளின் பெயர்கள் ரொம்பவே நீளமாக இருப்பதாகவும் வித்தியாசமாக இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் விக்னேஷ் சிவனின் குலதெய்வ கோவிலான தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே மேலவளத்தூரில் உள்ள ஆற்றங்கரை ஸ்ரீ காஞ்சி காமாட்சி அம்மன் திருகோவிலுக்கு சென்றுள்ளனர் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும். விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு சென்றடைந்தனர். அங்கு திரண்டிருந்த ரசிகர்கள் அவர்களுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் அங்கிருந்து கார் மூலம் அவர்களின் குலதெய்வ கோவிலுக்கு புறப்பட்டு சென்றனர். விக்னேஷ் சிவன் நயன்தாரா வருகையால் திருச்சி விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.