நீட் பயிற்சி மாணவி தண்டவாளத்தில் தலையை வைத்து தற்கொலை!

வடலூர் ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் தலையை வைத்து இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நெய்வேலி என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளரின் மகளான நிஷா என்ற பெண், மருத்துவ படிப்பில் சேருவதற்காக நீட் நுழைவுத் தேர்வுக்கு தயாராகி வந்தார். கடந்த ஆண்டு நீட் தேர்வில் தோல்வியடைந்த நிலையில், இந்த ஆண்டும் நீட் தேர்வு எழுதவிருந்தார். இதற்காக தனியார் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றுவந்தார். இந்நிலையில், நேற்று மாலை பெங்களூரில் இருந்து கடலூர் நோக்கி ரெயில் வந்தபோது, நிஷா தண்டவாளத்தில் தலையை வைத்து தற்கொலை செய்துள்ளார். இதுதொடர்பாக ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். நீட் பயிற்சி மையத்தில் நடத்தப்பட்ட மாதிரி தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் நிஷா மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர் தற்கொலை செய்திருக்கலாம் என தெரிகிறது.