பஞ்சாப் ராணுவ முகாமில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பலி!

பஞ்சாபில் உள்ள ராணுவ முகாமுக்குள் இன்று அதிகாலை மர்மநபர்கள் புகுந்து நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். பட்டப்பகலில் ராணுவ முகாமில் துப்பாக்கிச் சூடு நடந்திருப்பதால் பஞ்சாப் முழுவதும் ராணுவத்தினரும், போலீஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவிலேயே பாதுகாப்பு அச்சுறுத்தல் நிறைந்த மாநிலங்களாக விளங்குவது காஷ்மீரும், பஞ்சாபும் தான். இந்த இரு மாநிலங்களும் பாகிஸ்தான் எல்லைக்கு மிக அருகே அமைந்திருப்பதால் அடிக்கடி தீவிரவாதிகள் ஊடுருவலும், தாக்குதலும் இங்கு அதிகம் நடைபெறுவது வழக்கம். கடந்த 2016-ம் ஆண்டு கூட பஞ்சாப் மாநிலம் பதான்கோட்டில் உள்ள விமானப்படை தளத்தில் தீவிரவாதிகள் பயங்கர தாக்குதலை அரங்கேற்றினர். இதில் 7 பாதுகாப்புப் படையினர் உயிரிழந்தனர். பாகிஸ்தானில் இருந்து ஊடுருவும் தீவிரவாதிகள் ஒருபுறம் இருக்க, பஞ்சாபுக்கு உள்ளேயே காலிஸ்தான் தீவிரவாதக் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இந்தியாவில் பஞ்சாபை காலிஸ்தான் என்ற தனி நாடாக பிரித்து தர வேண்டும் என்பது இந்த தீவிரவாத அமைப்பின் கொள்கையாக உள்ளது. கடந்த சில மாதங்களாகவே அங்கு காலிஸ்தான் குழுக்கள் சற்று எழுச்சி பெற்று வருகின்றன. இந்த சூழலில்தான், பஞ்சாபில் ராணுவ முகாமில் பயங்கர தாக்குதல் அரங்கேறி இருக்கிறது.

பஞ்சாப் மாநிலம் பதிண்டா பகுதியில் ராணுவ முகாம் அமைந்துள்ளது. இந்நிலையில், இன்று அதிகாலை 4.30 மணியளவில் அங்கு திடீரென சரமாரியாக துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது. இதையடுத்து, அங்கு ராணுவத்தினரும், அதிகாரிகளும் விரைந்து சென்றனர். அப்போது அங்கு 4 ராணுவ வீரர்கள் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, உஷார் ஆன ராணுவத்தினர், பஞ்சாப் முழுவதும் உள்ள ராணுவ முகாம்கள் மற்றும் காவல் நிலையங்களுக்கு இந்த தகவலை தெரிவித்தனர். இதன் தொடர்ச்சியாக, பதிண்டா ராணுவ முகாமுக்கு அதிகப்படியான ராணுவ வீரர்கள் வந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஆனால் யாரும் பிடிபடவில்லை. இதனைத் தொடர்ந்து, பதிண்டா முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் ராணுவத்தினர் கொண்டு வந்துள்ளனர். மேலும், இந்த துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டவர்களை பிடிப்பதற்காக பஞ்சாப் முழுவதும் போலீஸாரும், ராணுவ வீரர்களும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, இது தீவிரவாத தாக்குதலாக இருக்குமா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

ராணுவ முகாம், அதனை சுற்றிய பகுதிகளை ராணுவம் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து தீவிர சோதனைகளை நடத்தியது. இந்த சோதனைகளில் பயங்கரவாத தாக்குதலுக்கான சாத்தியங்கள் எதுவும் இல்லை என தெரியவந்தது. இதனால் ராணுவ முகாமுக்குள் நடந்த துப்பாக்கிச் சூடு பயங்கரவாத தாக்குதல் அல்ல என போலீசார் விளக்கம் அளித்துள்ளனர். மேலும் பஞ்சாப் ராணுவ முகாமுக்குள் ஒரு ரைபிள் மற்றும் 28 தோட்டாக்கள் 2 நாட்களுக்கு முன்னர் காணாமல் போனது. இது தொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட்டது. பதிண்டா ராணுவ முகாமுக்குள் நிகழ்ந்த இந்த துப்பாக்கிச் சூட்டின் பின்னணியில் ராணுவ வீரர்கள் இருக்கலாம் எனவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக இந்திய ராணுவம் வெளியிட்ட அறிக்கையில், பதிண்டா ராணுவ முகாமில் 4 ஆர்ட்டிலரி யூனிட் வீரர்கள் துப்பாக்கிச் சூட்டு காயங்களுடன் உயிரிழந்துள்ளனர். 4 பேர் உயிரிழப்பைத் தவிர வேறு யாருக்கும் பாதிப்பு இல்லை. ராணுவ முகாமும் பாதிக்கப்படவில்லை. அப்பகுதி முழுவதும் சீல் வைக்கப்பட்டு விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன. அனைத்து கோணங்களிலும் பஞ்சாப் போலீசார் விசாரித்து வருகின்றனர். துப்பாக்கி, தோட்டாக்கள் காணாமல் போனதற்கும் துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்குமான தொடர்பு குறித்தும் விசாரிக்கப்பட்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டிருந்தது. இச்சம்பவம் தொடர்பாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கிடம் ராணுவ தளபதி மனோஜ் பாண்டே நேரில் விளக்கம் தர உள்ளார்.

இந்த நிலையில் பதிண்டா ராணுவ முகாமில் சக ராணுவ வீரர்களை சுட்டுக் கொன்றதாக சந்தேகத்தின் பேரில் மற்றொரு ராணுவ வீரர் கைது செய்யப்பட்டுள்ளதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.