கோவையில் வீட்டு தண்ணீர் தொட்டிக்குள் விழுந்த குட்டி யானை பலி!

கோவை மாவட்டம் பெரிய நாயக்கன் பாளையம் பகுதியில் உள்ள நடிகர் சத்யராஜ் சகோதரியின் தோட்டத்து வீட்டின் நீர் தொட்டிக்குள் விழுந்து குட்டி யானை உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது.

கோவை மாநகரை ஒட்டிய வனப்பகுதிகள் தான் யானைகளின் புகலிடமாக உள்ளது. குறிப்பாக பெரிய நாயக்கன் பாளையம், தொண்டாமுத்தூரை ஓட்டிய மேற்கு தொட்ர்ச்சி மலை அடிவாரப்பகுதிகளின் காட்டு யானைகள் அடிக்கடி தஞ்சமடையும். இந்த பகுதியில் உள்ள மலையடிவார பகுதிகளுக்கு குடிநீர் மற்றும் உணவுக்காக காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாகவோ, அல்லது தனியாகவோ வந்த செல்வது வழக்கம். அப்படி வரும் யானைகளால் பயிர் சேதங்கள் மற்றும் உயிர் சேதங்கள் ஏற்படுவது அடிக்கடி நடப்பதுண்டு. குறிப்பாக கோடை காலங்களில் வனப்பகுதிகள் வறட்சியாக காணப்படும் என்பதால், உணவு மற்றும் குடிநீரை தேடி யானைகள் மலை அடிவாரம் மற்றும் மலைகளில் இடம் பெயர்வது அடிக்கடி நடக்கும்.

தற்போது கோடை காலம் துவங்கியதால் வனப்பகுதியில் நிலவும் வறட்சி காரணமாக, காட்டு யானைகள் கிராமப்பகுதிகளுக்கு அதிகளவில் வருகின்றன. அப்படித்தான் கோவை பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட நாயக்கன்பாளையம் கிராமத்திற்கு அருகேயுள்ள தடாகம் காப்புக்காட்டில் இருந்து குட்டியுடன் ஒரு தாய் யானை வந்திருக்கிறது. வன எல்லையில் இருந்து சுமார் 180 மீட்டர் தொலைவில் நாய்க்கன்பாளையம் கிராமத்திற்கு உட்பட்ட அபராஜிதா (நடிகர் சத்யராஜின் சகோதரி) என்பவருக்கு சொந்தமான பட்டா நிலத்திற்குள் இரண்டு யானைகளும் சென்றுள்ளது. அப்போது அந்த தோட்டத்து வீட்டின், கீழ்நிலை நீர்த் தேக்கத் தொட்டியில், எதிர்பாராத விதமாக யானைக் குட்டி விழுந்துள்ளது. தண்ணீர் தொட்டிக்குள் இருந்து வெளியே வர முடியாமல், தண்ணீரில் மூழ்கி குட்டி யானை இறந்துபோனது.

தொட்டியில் இருந்து வீசிய துர்நாற்றத்தை அடுத்து, அங்கு வேலை பார்த்தவர்கள் நேரில் சென்று பார்த்த போது குட்டி யானை, தொட்டியில் விழுந்து உயிரிழந்தது தெரியவந்தது. இது குறித்து அவர்கள் பெரியநாய்க்கன்பாளையம் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பெரியநாயக்கன்பாளையம் வனச்சரக அலுவலர், வனவர், வனக்காப்பாளர் மற்றும் வேட்டைத் தடுப்புக் காவலர்கள் அடங்கிய தனிக்குழுவினர் விசாரணை நடத்தினர். மேலும் தண்ணீர் தொட்டிக்குள் மிதந்து கொண்டிருந்த உயிரிழந்த குட்டி யானையின் உடலை வனத்துறையினர் மீட்டனர். உடலைக் கைப்பற்றி குட்டி யானை எப்படி தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து உயிரிழந்தது என்பது குறித்து விசாரித்து வருகிறார்கள்.