எடப்பாடி தொடர்ந்த வழக்கில் தேர்தல் ஆணையத்துக்கு 10 நாள்கள் அவகாசம்!

எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் தேர்தல் ஆணையத்துக்கு முக்கிய உத்தரவை பிறப்பித்து டெல்லி உயர் நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்துள்ளது.

அதிமுக கட்சி விதி திருத்தங்களை அங்கீகரிக்கக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி ரிட் மனு தக்கல் செய்து இருந்தார். ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராகவும், பொதுச் செயலாளர் தேர்தலுக்கு எதிராகவும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தொடர்ந்த வழக்கிலும் தீர்மானங்களுக்கு தடை விதிக்க முடியாது என்றும் பொதுச் செயலாளர் தேர்தல் முடிவுகளை வெளியிடலாம் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பு ஒரு பக்கம் மேல்முறையீடு செய்துள்ள நிலையில் அது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

உயர் நீதிமன்றம் பொதுச் செயலாளர் தேர்தல் முடிவை அறிவிக்கலாம் என்று உத்தரவிட்ட உடன் அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டு பதவியேற்றார். எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு தெரியப்படுத்திய போதும் அந்த மாற்றத்தை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கவில்லை. இதனால் அதிமுகவின் உச்ச பதவியான ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர் செல்வம் தான் தொடர்வதாக கூறி வருகின்றனர் அவரது ஆதரவாளர்கள்.

இந்நிலையில் அதிமுக விதிகளில் செய்யப்பட்ட திருத்தங்களை இதுவரை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்காத நிலையில், அந்த திருத்தங்களை அங்கீகரிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி மனு தாக்கல் செய்து இருந்தார். இந்த மனுவை இன்று (ஏப்ரல் 12) விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கை குறித்து 10 நாட்களுக்குள் முடிவு எடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது. அதோடு இந்த வழக்கையும் டெல்லி உயர் நீதிமன்றம் முடித்து வைத்தது.