தற்போதைக்கு திருமணம் இல்லை: கீர்த்தி சுரேஷ்!

தென்னிந்திய மொழிகளில் பிரபலமாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் தன் திருமணம் பற்றி முதல்முறையாக பேசியுள்ளார்.

தமிழில் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான இது என்ன மாயம் என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார் கீர்த்தி சுரேஷ். அப்படம் அவருக்கு சரியான துவக்கத்தை தரவில்லை. இதையடுத்து அவர் சிவகார்த்திகேயனுடன் நடித்த ரஜினி முருகன் திரைப்படத்தின் வெளியீடு தள்ளிக்கொண்டே சென்றது.
கடைசியில் ஒருவழியாக ரஜினி முருகன் திரைப்படம் பல தடைகளை தாண்டி வெளியாகி மாபெரும் வெற்றிபெற்றது. இப்படம் கீர்த்தி சுரேஷிற்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இதைத்தொடர்ந்து ரெமோ, பைரவா, சர்க்கார், சாமி 2 என தொடர்ந்து முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்து முன்னணி நாயகியாக உயர்ந்தார்.

தமிழில் மட்டுமல்லாது தெலுங்கியும் பல படங்களில் நடித்து வந்தார் கீர்த்தி சுரேஷ். குறிப்பாக நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்று படமான மகாநதி படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்காக தேசிய விருதை பெற்றார் கீர்த்தி சுரேஷ். இந்நிலையில் சமீபகாலமாக படங்களில் நடிப்பதை குறைத்து வந்தார் கீர்த்தி சுரேஷ். இதனால் அவர் விரைவில் திருமணம் செய்யப்போகிறார் என்றும், அதன் காரணமாகத்தான் அவர் படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்டார் என்றும் வதந்திகள் பரவின. மேலும் அவர் கேரளாவை சேர்ந்த ஒரு தொழிலதிபரை காதலித்து வருவதாகவும் பரவலாக பேசப்பட்டு வந்தன.

இந்நிலையில் தனது திருமணம் பற்றி நடிகை கீர்த்தி சுரேஷே சமீபத்தில் பேசியுள்ளார். இன்ஸ்டாவில் அடிக்கடி ரசிகர்களுடன் உரையாடுவதை வழக்கமாக வைத்துள்ள கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது ஒரு ரசிகர் கீர்த்தி சுரேஷின் திருமணம் பற்றி கேள்வி கேட்க அதற்கு கீர்த்தி சுரேஷ் வடிவேலுவின் புகைப்படத்தை போட்டு பதிலளித்தார். அப்புகைப்படம் திருமணம் பற்றி கீர்த்தி சுரேஷ் தற்போது யோசிக்கவில்லை என்பதை உணர்த்துவதாக இருந்தது. இதையடுத்து ரசிகர்கள் கீர்த்தி சுரேஷ் விரைவில் திருமணம் செய்துகொள்ள போகின்றார் என நினைத்தால் இப்படி சொல்லிட்டாங்களே என பேசி வருகின்றனர்.