சிங்கப்பூரில் தொழில் நிறுவனங்களுடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு!

சிங்கப்பூரில் தொழில் நிறுவனங்களுடன் ஆலோசனை மேற்கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், கடல் காற்றாலைகள், ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள், உணவு பதப்படுத்தல் துறை, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆகிய துறைகளில் முதலீடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

சிங்கப்பூர் நாட்டு தொழில் நிறுவனங்களின் தலைமை செயல் அலுவலர்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து தமிழகத்தில் தொழில் முதலீடுகள் மேற்கொள்வது குறித்து ஆலோசனை கொண்டார். இதன்படி, Temasek, Sembcorp, CapitaLand ஆகிய நிறுவனங்களின் தலைமை செயல் அலுவலர்களை சந்தித்துப் பேசினார். அப்போது தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கு நிலவும் சாதகமான சூழ்நிலையை எடுத்துக்கூறி, தமிழகத்தில் தொழில் முதலீடுகள் செய்திட வேண்டுமென்று கோரிக்கை விடுத்து, சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளவும் அழைப்பு விடுத்தார்.

டமாசெக் (Temasek) நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் தில்ஹான் பிள்ளை சந்திரசேகரா உடன் சந்திப்பு. முதல்வர் ஸ்டாலின் இச்சந்திப்பின்போது, டமாசெக் நிறுவன தலைமை செயல் அலுவலரிடம், இந்தியாவில் தென் பகுதியில் அமைந்திருக்கும் தமிழ்நாடு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியில் தெற்காசிய நாடுகளிலேயே மிக வேகமாக வளர்ந்து வரும் மாநிலமாக திகழ்கிறது என்று தெரிவித்தார்.
டமாசெக் நிறுவனம் தமிழ்நாட்டில் காற்றாலை உற்பத்தியில் ஏற்கனவே முதலீடு செய்துள்ளதற்கு தனது நன்றியை தெரிவித்துக் கொண்ட முதல்வர், தமிழகத்தில் ஏற்கனவே உள்ள காற்றாலைகளை வலுப்படுத்தவும், புதிய கடல் சார்ந்த காற்றாலைகளை நிறுவவும் டமாசெக் நிறுவனத்தை கேட்டுக் கொண்டார்.

தற்போது இளம் தொழில் முனைவோர்களை தமிழ்நாடு அரசு ஊக்குவித்து வருவதால் Startup நிறுவனங்கள் பல்வேறு புதிய தொழில்நுட்ப பிரிவுகளில் புதிய தொழில்களை தொடங்கி வருகிறது. இந்த Startup நிறுவனங்களில் டமாசெக் நிறுவனம் முதலீடு செய்திட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

இந்தியாவின் மொத்த உணவு பதப்படுத்தல் துறையில் தமிழ்நாடு தற்போது 8 சதவீத பங்களிப்பை வழங்குகிறது என்றும், தமிழகம் அரசு உணவு பதப்படுத்தும் தொழில் பூங்காக்களை நிறுவுவதில் கவனம் செலுத்தி வருவதால், அவற்றில் டமாசெக் நிறுவனத்தின் முதலீடு தமிழகத்தின் வேளாண் வளர்ச்சிக்கும், சிங்கப்பூரின் எதிர்கால உணவு பாதுகாப்பிற்கும் பெரும் உதவியாக இருக்கும் என்று முதல்வர் தெரிவித்தார். மேலும், தமிழகத்தில் Fintech city என்ற நிதி நிறுவனங்களுக்கான தனியான கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்றும், அவற்றிலும் டமாசெக் நிறுவனம் முதலீடு செய்திட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். அதற்கு டமாசெக் நிறுவன தலைமை செயல் அலுவலர், முதல்வர் முதலீடுகள் செய்திட அழைப்பு விடுத்த பல்வேறு துறைகளோடு மட்டுமின்றி, மீன்பிடி சார்ந்த தொழில் துறைகளிலும், உணவுப் பதப்படுத்தும் துறைகளிலும் தங்கள் நிறுவனம் தமிழகத்தில் முதலீடு செய்வதற்கு ஆர்வமாக உள்ளதாக முதல்வரிடம் தெரிவித்தார்.

செம்ப்கார்ப் (Sembcorp) நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் கிம்யின் வாங்க் உடன் சந்திப்பு. இச்சந்திப்பின்போது, முதல்வர், புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் உலக அளவில் செம்ப்கார்ப் நிறுவனம் சிறப்பான இடத்தை வகிக்து வருவதற்கு தனது மகிழ்ச்சியை தெரிவித்துக் கொண்டதோடு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் தமிழகம் இந்தியாவின் மிக முக்கியமான மாநிலம் என்றும், எரிசக்தி தொடர்பான பல்வேறு பிரிவுகளில் செம்ப்கார்ப் நிறுவனம் தமிழ்க அரசின் எரிசக்தி துறையுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். குறிப்பாக, pumped hydro storage திட்டங்களுக்கான வழிமுறைகளை தற்போது இந்திய அரசு எளிமையாக்கி உள்ளதால், PPP முறையில் இந்தத் திட்டங்களை தமிழகத்தில் செம்ப்கார்ப் நிறுவனம், தமிழக அரசுடன் இணைந்து கூட்டாக நிறைவேற்றிட கேட்டுக் கொண்டார்.

மேலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மிகுந்த அக்கறையுடன் செயல்படும் தமிழக அரசு பல்வேறு புதிய முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருவதால், பசுமை எரிசக்தி உற்பத்திக்குத் தேவையான நவீன தொழில்நுட்பங்கள் தமிழ்நாட்டிற்கு தேவைப்படுவதை குறிப்பிட்டு, செம்ப்கார்ப் நிறுவனத்தின் தொழில்நுட்ப பலம் தமிழ்நாட்டிற்கு பெரிதும் உதவிகரமாக இருக்கும் என்று தெரிவித்தார்.

கேப்பிட்டா லேண்ட் (CapitaLand) நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் சஞ்சீவ் தாஸ்குப்தா உடன் சந்திப்பு. இச்சந்திப்பின்போது, முதல்வர், கேப்பிட்டா லேண்ட் நிறுவனம் பல்வேறு புதிய தளங்களில் கால் பதித்து வருவதற்கு தனது மகிழ்ச்சியை தெரிவித்துக் கொண்டார். உலகின் மிகச்சிறந்த தொழில் நுட்பங்களை ஒருங்கிணைத்து சிங்கப்பூரில் கேப்பிட்டா லேண்ட் நிறுவனம் வடிவமைத்துள்ள ‘சிங்கப்பூர் சயின்ஸ் பார்க்’ போன்ற பல்வேறு பல்வேறு வகையான ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு (Research and Development) கட்டமைப்புகளை உருவாக்குவதில் தமிழக அரசு ஆர்வமாக உள்ளதால் அவற்றில் கேப்பிட்டா லேண்ட் நிறுவனத்தின் தொழில்நுட்ப பங்களிப்பையும் முதலீடுகளையும் அளித்திட வேண்டும் என்று முதல்வர் கேட்டுக் கொண்டார்.