தி.மு.க. அரசின் நிர்வாகத் திறமையின்மைக்கு இது ஓர் எடுத்துக்காட்டு: ஓ.பன்னீர்செல்வம்

ஆவின் நிறுவனத்தை அழிவு பாதைக்கு கொண்டு செல்வதா? தி.மு.க. அரசின் நிர்வாகத் திறமையின்மைக்கு இது ஓர் எடுத்துக்காட்டு என்று ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

குஜராத் மாநிலத்தின் அமுல் நிறுவனம் தமிழ்நாட்டில் தனது வணிகத்தை தொடங்க திட்டமிட்டுள்ளது. தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில், ஆவின் நிறுவனம் தனது மொத்த பால் உற்பத்தியை பெருக்கும் வகையில் நவீன தொழில்நுட்பத்துடன் மேம்படுத்தப்படும் என்றும், பிற மாநிலங்களுக்கு வணிகத்தை விரிவுபடுத்துவது ஊக்குவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முற்றிலும் மாறான சூழ்நிலை கடந்த 2 ஆண்டுகளாக ஆவின் நிறுவனத்தில் நடைபெற்று வருகிறது.

தமிழ்நாட்டு மக்களின் தேவையையே பூர்த்தி செய்ய முடியாத அவலநிலை நிலவுவதோடு மட்டுமல்லாமல், பிற மாநில நிறுவனங்கள் தமிழ்நாட்டில் கால் பதிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.பால் உற்பத்தியாளர்களுக்கு உரிய விலை அளிக்கப்பட்டிருந்தால் இதுபோன்ற நிலைமை ஏற்பட்டு இருக்காது. தி.மு.க. அரசின் நிர்வாகத் திறமையின்மைக்கு இது ஓர் எடுத்துக்காட்டு. ஆவின் பால் மற்றும் ஆவின் பால் பொருட்கள் குறைந்த விலையில் மக்களுக்கு கிடைக்கவும், பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையினை கனிவுடன் பரிசீலித்து பால் கொள்முதல் விலையை உயர்த்தவும் உடனடி நடவடிக்கை எடுத்து, ஆவின் நிறுவனத்தை அழிவு பாதையிலிருந்து ஆக்கப்பூர்வமான பாதைக்கு கொண்டு செல்ல முனைப்புடன் செயல்படவேண்டும் என்று முதல்-அமைச்சரை கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.