ஜப்பானில் 16ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஒசாகா கோட்டையில் முக.ஸ்டாலின்!

ஜப்பான் நாட்டின் கலாச்சார சொத்தாக திகழும் 16ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஒசாகா கோட்டையை முதலமைச்சர் ஸ்டாலின் பார்வையிட்டார்.

ஜப்பான் நாட்டின் ஒசாகாவில் முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு பிறகு நடைபெற்ற மதிய உணவு விருந்தில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஒசாகா மாகாணத்தின் துணை ஆளுநர் நோபுஹிகோ யமாகுஜி (Osaka Province Vice Governor Mr. Nobuhiko Yamaguchi) ஜப்பான் நாட்டின் பழம்பெரும் கோட்டையான ஒசாகா கோட்டையின் சிறப்பைப் பற்றி எடுத்துக்கூறி அதனை பார்வையிடுமாறு அழைப்பு விடுத்தார். அவரது அழைப்பினையேற்று, முதலமைச்சர் ஸ்டாலின் இன்று, ஒசாகாவில் உள்ள 16-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட உலகப் புகழ்பெற்ற பழம்பெரும் கோட்டையான ஒசாகா கோட்டையை பார்வையிட்டார்.

ஒசாகா கோட்டை அசுச்சி-மோமோயாமா காலத்தின் 16-ஆம் நூற்றாண்டில் ஜப்பானை ஒன்றிணைப்பதில் முக்கிய பங்கு வகித்தது. இக்கோட்டை சுமார் 61,000 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்டது. ஜப்பானிய அரசால் இக்கோட்டை முக்கியமான கலாச்சார சொத்தாக போற்றி பாதுகாக்கப்பட்டு வருகிறது. இக்கோட்டையானது அகழிகள், கிணறுகள், தோட்டங்கள் போன்ற இயற்கை சூழலுடன் அமைந்துள்ளது. தமிழ்மொழியின் பெருமையையும், தமிழர் நாகரிகத்தையும், பண்பாட்டையும் உலகிற்கு எடுத்துரைக்கும் வகையில், முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அரசு, பண்டைய தமிழர்களின் செழுமையான பண்பாட்டு சான்றுகளை உலகம் அறிந்து கொள்ளும் வகையில், அகழ்வாராய்ச்சி பணிகளை மேற்கொண்டு வருகிறது. அத்துடன், கி.மு. ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த கீழடி நாகரிகம் பற்றிய அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்களை உலக மக்கள் அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் உலகத் தரத்தில் சிவகங்கை மாவட்டத்தில் கீழடி அருங்காட்சியகத்தை நிறுவியது. இதன்மூலம், பண்டைய கலாச்சார சின்னங்களை போற்றி பாதுகாத்திடும் நடவடிக்கைகளில் ஜப்பான் அரசும், தமிழ்நாடு அரசும் ஒன்றுபோல் செயலாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.