டிஆர்பி மூலமாக 4 ஆயிரம் பேராசிரியர்கள் நியமனம்: அமைச்சர் பொன்முடி!

டிஆர்பி மூலமாக 4 ஆயிரம் பேராசிரியர்களை நியமனம் சேய்ய இருக்கிறோம். நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் இருப்பதால் கொஞ்சம் தாமதம் ஆகியுள்ளது என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: –

அரசு கலைக்கல்லூரிகளில் சேருவதற்கு நிறைய விண்ணப்பங்கள் வந்து கொண்டிருக்கின்றன. மாணவர்கள் ஆர்வத்துடன் வந்துகொண்டு இருக்கிறார்கள். அதுவும் குறிப்பாக அரசு பள்ளிகளில் படித்த மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்ததால் மகளிர் சேர்க்கை கல்லூரியில் அதிகரித்துள்ளது. உயர் கல்வியை பொருத்தவரை அரசு கலை அறிவியல் கல்லூரியில் நிறைய மாணவர்கள் படிப்பதற்கான வாய்ப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. உயர் கல்வித்துறை பொற்காலமாக மாற வேண்டும் என்ற முதல்வரின் திட்டத்தின் அடிப்படையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அரசு கலை கல்லூரிகளில் மாணவ மாணவிகள் சேருவதற்காக விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை 15 சதவிகிதம் அதிகரித்துள்ளது. டி.ஆர்.பி மூலமாக 4 ஆயிரம் பேராசிரியர்களை நியமனம் செய்ய இருக்கிறோம். நீதிமன்றத்தில் வழக்குகள் கொஞ்சம் நிலுவையில் இருப்பதால் தாமதம் ஆகியுள்ளது. ஜூன் முதல் வாரத்தில் நீதிமன்றத்தில் தீர்ப்பு வந்துவிடும். வந்த பிறகு 4 ஆயிரம் பேர் கல்லூரி பேராசிரியர்களாக நியமிக்கப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.