அரிசி கொம்பன் யானை தாக்கி பலியானவரின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிவாரணம்!

தேனி மாவட்டம் கம்பத்தில் அரிசி கொம்பன் யானை தாக்கி உயிரிழந்த பால்ராஜ் என்பவரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவித்து உள்ளார்.

தேனி மாவட்டம் கம்பத்தை அடுத்த ஆசாரியார் தெருவைச் சேர்ந்த பால்ராஜ் என்பவரை கடந்த சில நாட்களுக்கு முன் ஊருக்குள் புகுந்த அரிசி கொம்பன் யானை தாக்கியது. கம்பம் நகர குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்த அரிசி கொம்பன் யானை வனத்துறை வாகனம் மற்றும் ஆட்டோவை தாக்கியது. அப்போது யானையை பார்ப்பதற்காக நின்றுகொண்டிருந்த பால்ராஜை அரிசி கொம்பன் யானை தாக்கியது. இதில் படுகாயமடைந்த அவர் உயர்சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காயமடைந்த அவருக்கு ரூ.50 ஆயிரம் நிவாரண உதவி அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுகுறித்து இரங்கல் செய்தி வெளியிட்டு உள்ள முதலமைச்சர் முக ஸ்டாலின் பால்ராஜ் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்து ரூ.5 லட்சம் நிவாரண உதவியும் அறிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில் கூறியுள்ளதாவது:-

தேனி மாவட்டம், கம்பம் பகுதியில் கடந்த 27-5-2023 அன்று இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த திரு.பால்ராஜ் என்பவர் அரிக்கொம்பன் என்ற காட்டுயானையை எதிர்பாராதவிதமாக பார்த்ததில் அதிர்ச்சியடைந்து கீழே விழுந்து சிகிச்சைக்காக தேனி மாவட்டம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிறப்பான சிகிச்சையளிக்கப்பட்ட போதும் அதற்கு பலனின்றி இன்று (30-5-2023) அவர் உயிரிழந்தார் என்ற செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். உயிரிழந்த திரு.பால்ராஜ் அவர்களின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ஐந்து இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொதுநிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.

மேலும் இந்த அரிக்கொம்பன் என்ற காட்டு யானையைப் பிடிப்பதற்கு தமிழ்நாடு அரசின் வனத்துறை அனைத்து விதமான நடவடிக்கைகளையும் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இதற்கென மூத்த அனுபவம் வாய்ந்த வன அலுவலர்களைக் கொண்ட ஒரு சிறப்புக் குழு திருவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்தின் கள இயக்குநரின் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கால்நடை மருத்துவர்களைக் கொண்ட ஒரு குழுவும் முதுமலை மற்றும் ஆனைமலை புலிகள் காப்பகம் மற்றும் உள்ளூர் வனப்பகுதியைச் சார்ந்த 16 யானைத்தட கண்காணிப்புக் காவலர்கள் இந்த அரிக்கொம்பன் என்ற காட்டுயானையின் நடமாட்டத்தை கண்காணித்து அந்த யானையை பத்திரமாக வனப் பகுதிக்கு அனுப்ப நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்கள். இதற்கென ஒரு தனி கட்டுப்பாட்டு அறையும் கம்பம் வனச் சரக அலுவலகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது தவிர, பிறபகுதியினைச் சார்ந்த 200 வனத்துறை அலுவலர்கள் அப்பகுதி மக்களின் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள். தேனி மாவட்ட ஆட்சியரும் அங்குள்ள நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து தேவையான நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.