தமிழ் கலாச்சாரம், உணர்வுகளுக்கு எதிராக கவர்னர் செயல்படுகிறார்: கே.எஸ்.அழகிரி

தமிழக கவர்னர் தமிழ் கலாச்சாரம் உணர்வுகளுக்கு எதிராக தொடர்ந்து பேசி வருகிறார் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, முன்னால் ஐ.ஏ.எஸ். அதிகாரி சசிகாந்த், செந்தில் ஆகியோர் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

தமிழக கவர்னர் தமிழ் கலாச்சாரம் உணர்வுகளுக்கு எதிராக தொடர்ந்து பேசி வருகிறார். அவ்வப்போது அவருடைய எல்லை மீறிய பேச்சுக்கு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்து வந்தாலும் தொடர்ந்து அவர் பேசி வருகிறார். இப்போது அந்நிய மூலதனம் நேரடியாக போய் கேட்பதால் வராது என்ற ஒரு கருத்தை வெளியிட்டு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளிநாடுகளுக்குச் சென்று தமிழகத்தின் வளர்ச்சிக்காக அந்நிய மூல தனங்களை ஈர்த்து வந்ததை குறை கூறி இருக்கிறார். தமிழகத்தில் கல்வி சரியில்லை. கட்டமைப்புகள் சரியில்லை. அதனால் அந்நிய மூலதனங்கள் வராது என்றெல்லாம் கூறி இருக்கிறார்.

உத்தரப்பிரதேசத்திற்கு செல்லாத முதலீடுகள் தமிழகத்திற்கு வருகிறது. ஏன் தொழில் நுட்பமும் மூலதனமும் இருப்பவர்கள் எங்கே மனித வளம் அதிகமாக இருக்கிறதோ அங்கே தான் முதலீடு செய்வார்கள் மனித வளம் நிறைந்த தமிழகத்தில் முதலீடுகளை ஈர்க்கும் பணிகளை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. மோடி வந்த பிறகுதான் நாட்டில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது என்று கூறுகிறார். உண்மையில் தொழில் வளர்ச்சி ஏற்பட்டது. நரசிம்மராவ், மன்மோகன் சிங், சிதம்பரம் ஆகியோர் காலத்தில் தான். இப்போது தொழில் வளர்ச்சி 9 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாக குறைந்து இருக்கிறது. மோடி அரசு வளர்ச்சி பாதையில் இருந்து விலகி மதவாத அரசியலை மட்டுமே நம்பி இருக்கிறது. இப்போது மணிப்பூரில் ஒரு இன அழிப்பையே அரசாங்கம் செய்து வருகிறது. பெருவாரியான பழங்குடியின மக்கள் கிறிஸ்தவர்களாக இருப்பதால் அவர்களுக்கு எதிராக ஒரு குழுவை அரசாங்கமே உருவாக்கி அவர்களுக்குள் மோதலை ஏற்படுத்தி மிகப் பெரிய இன அழிப்பை நடத்தி வருகிறது. இப்போது 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் காடுகளில் தஞ்சம் புகுந்திருக்கிறார்கள். இவ்வாறு அவர்கள் கூறினர்.