பண்ருட்டி அருகே நிகழ்ந்த கோர விபத்து: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!

பண்ருட்டி அருகே நிகழ்ந்த கோர விபத்தில் சிக்கி பலர் உயிரிழந்துள்ளனர். ஏராளமானோர் உயிரிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து கேள்விப்பட்ட முதல்வர் ஸ்டாலின் கடலூர் மாவட்ட ஆட்சியரை தொடர்பு கொண்டு உடனடியாக மீட்பு நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்.

கடலூர் மாவட்ட மத்திய பேருந்து நிலையத்திலிருந்து நாள்தோறும் பண்ருட்டி பகுதிக்கு தனியார் மற்றும் அரசு பேருந்துகள் செல்கின்றன. இந்நிலையில் காலை 10 மணி அளவில் கடலூரிலிருந்து பண்ருட்டிக்கு இன்று காலை பயணிகளை ஏற்றிக்கொண்டு தனியார் பேருந்து சென்றது. இதேபோன்று பண்ருட்டியிலிருந்து கடலூருக்கு பயணிகளை ஏற்றிகொண்டு தனியார் பேருந்து எதிரில் வந்தது. பண்ருட்டியில் இருந்து கடலூர் நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்தின் முன்பக்க டயர் வெடித்தது. இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து மேல்பட்டாம்பாக்கம் கிராமம் அருகே சாலையில் தாறுமாறாக ஓடியது. அப்போது கடலூரிலிருந்து பண்ருட்டி சென்று கொண்டிருந்த பேருந்தின் ஓட்டுநர் இதனை பார்த்து அதிர்ச்சியடைந்தார். எதிரில் தாறுமாறாக வந்த பேருந்து மோதாமல் இருக்க ஓரமாக பேருந்தை ஓட்டுநர் ஓட்டிச் சென்றார். அப்படியும் முன் டயர் வெடித்து தாறுமாறாக வந்த பேருந்து எதிரில் ஓரமாக வந்த பேருந்து மீது நேருக்கு நேராக மோதியது. இந்த கோர விபத்தில் இரண்டு பேருந்தின் முன் பக்கமும் அப்பளம் போல நொறுங்கி சேதமடைந்தது.

பேருந்துகளுக்குள் சிக்கியிருந்த பயணிகள் அலறினர். அப்போது அங்கிருந்த இளைஞர்களும் பொதுமக்களும் விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர். ஆம்புலன்ஸ் மற்றும் காவல்நிலையத்திற்கும் தகவல் அளித்தனர். இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். 80க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்தில் உயிரிழந்தவர்கள் யார் யார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இந்த விபத்து குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது:-

கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பம் காவல் நிலைய சரகம், மேல்பட்டாம்பாக்கம் கிராமத்தில் இன்று காலை பண்ருட்டியிலிருந்து கடலூருக்குச் சென்ற தனியார் பேருந்தின் வலதுபுற முன் டயர் எதிர்பாராதவிதமாக வெடித்து கடலூரிலிருந்து பண்ருட்டி வந்த தனியார் பஸ் மீது மோதியதால் ஏற்பட்ட விபத்தில் நான்கு பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். இச்சம்பவத்தை கேள்விப்பட்டவுடன் கடலூர் மாவட்ட ஆட்சியரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு விபத்து நடந்த இடத்திற்கு சென்று தேவையான மீட்பு நடவடிக்கைகளையும், மருத்துவ உதவிகளையும் விரைந்து மேற்கொள்ள கேட்டுக்கொண்டேன்.

மேலும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அவர்களையும், தொழிலாளர் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் அவர்களையும் மருத்துவமனைக்கு நேரில் சென்று விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதிசெய்யுமாறும் அறிவுறுத்தியுள்ளேன். இவ்விபத்தில் உறவினர்களுக்கும் உயிரிழந்தவர்களின் குடும்பனத்தினருக்கும் அவர்களது எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 2 லட்சம் ரூபாயும், படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும். லேசான காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாயும். முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.