மதுரையில் அதிமுக முன்னாள் எம்எல்ஏவின் காரை கொளுத்திய திமுக நிர்வாகி: எடப்பாடி கண்டனம்!

மதுரை கருவனூரில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ பொன்னம்பலம் காருக்கு தீ வைக்கப்பட்டு, வீடு சூறையாடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்டம் சத்திரப்பட்டி அருகே கருவனூர் கிராமத்தில் முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பொன்னம்பலம் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். பொன்னம்பலம் கடந்த 2001-2006 காலகட்டத்தில் சமயநல்லூர் தொகுதி எம்.எல்.ஏவாக இருந்தவர். இந்நிலையில், முன்னாள் எம்.எல்.ஏ பொன்னம்பலத்தின் சொந்த ஊரான கருவனூரில் உள்ள பாறை கருப்பசாமி கோவிலில் கடந்த ஒரு வாரமாக திருவிழா நடைபெற்று முடிந்துள்ளது. இந்த திருவிழாவின்போது கோவில் மரியாதை அளிப்பதில் யாருக்கு முன்னுரிமை என்பதில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ பொன்னம்பலத்திற்கும், திமுக கிளை செயலாளர் வேல்முருகன் தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வேல்முருகன் தரப்பினர் பொன்னம்பலத்தின் வீட்டிற்குச் சென்று கற்களை வீசி தாக்கியுள்ளனர். வீட்டில் இருந்த டிவி, ஃப்ரிட்ஜ், பைக், கார் ஆகியவற்றை அடித்து உடைத்துள்ளனர். மேலும், அவரது காரை பெட்ரோலை ஊற்றி எரித்துள்ளனர். திமுக பிரமுகரின் ஆதரவாளர்கள் கல் வீசி தாக்குதல் நடத்தியதில் பொன்னம்பலத்தின் உறவினர்கள் காயமடைந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காருக்கு தீ வைத்த புகாரில் திமுக கிளை செயலாளர் வேல்முருகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனிடையே வேல்முருகன் மற்றும் அவரது கூட்டாளிகள் தலைமறைவாகியுள்ளனர். கோயில் விழாவில் முதல் மரியாதை வழங்குவதில் இரு தரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டதில், முன்னாள் எம்.எல்.ஏவின் வீடு சூறையாடப்பட்டு கார் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியுள்ளதாவது:-

மதுரை மாவட்டம் கருவனூரில் முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பொன்னம்பலம் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது திமுகவினர் கொடூரமாக தாக்கியும், அவரது வீட்டை சூறையாடியும், அவர்களது வாகனங்களுக்கு தீ வைத்தும் வன்முறையை மேற்கொண்டுள்ள சம்பவத்திற்கு எனது கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன். அமைச்சர் மூர்த்தி அந்த ஊர் கோயிலுக்கு வந்து சென்றபின்பு இந்த தாக்குதல் நடைபெற்றிருப்பதும், தாக்குதலில் ஈடுபட்டவர்களை கைது செய்ய-நடவடிக்கை எடுக்க காவல்துறை தயங்குவதும் மிகுந்த கண்டணத்துக்குரியது.

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஒருவருக்கே பாதுகாப்பில்லாத வகையிலும், சாமானியர்கள் அஞ்சும் வகையிலும் அராஜகத்தின் மொத்த உருவமாய் செயல்படும் இந்த ஆட்சியில் வன்முறை களமாக தமிழ்நாடு மாறி இருப்பது வேதனைக்குரியது மட்டுமல்ல வெட்கக்கேடானது‌. இதுபோன்ற வன்முறை சம்பவங்கள் இனியும் தொடர்ந்து நடக்குமேயானால் அதற்கான விளைவுகளை இந்த அரசு சந்திக்க நேரிடும் என எச்சரிப்பதுடன், பொன்னம்பலம் அவர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியவர்கள் மீது உடனடியாக கைது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் இந்த விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.