திமுக ஆதரவு தமிழறிஞர்களுக்கு மட்டுமே கனவு இல்லத் திட்டத்தின் கீழ் குடியிருப்புகள்: ஓபிஎஸ் கண்டனம்!

திமுக ஆதரவு தமிழறிஞர்களுக்கு மட்டுமே கனவு இல்லத் திட்டத்தின் கீழ் குடியிருப்புகள் ஒதுக்கீடு செய்யப்படுவதாக ஓபிஎஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

தமிழறிஞர்களுக்கு விருதுகள் வழங்குவதை தாய்மொழிக்கு செய்யும் தொண்டாக தமிழ்நாடு அரசு பல ஆண்டு காலமாக மேற்கொண்டு வருகிறது. இதன்படி, பாவேந்தர் பாரதிதாசன் விருது, தமிழ்த் தென்றல் திரு.வி.க. விருது, திருவள்ளுவர் விருது, மகாகவி பாரதியார் விருது, முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது, பேரறிஞர் அண்ணா விருது, பெருந்தலைவர் காமராசர் விருது, கபிலர் விருது, உ.வே.சா. விருது, கம்பர் விருது, சொல்லின் செல்வர் விருது, உமறுப் புலவர் விருது, ஜி.யு. போப் விருது, அம்மா இலக்கிய விருது, காரைக்கால் அம்மையார் விருது என பல விருதுகள் தமிழக அரசால் தமிழறிஞர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன.

திமுக அரசு பொறுப்பேற்றதும், ‘கனவு இல்லத் திட்டம்’ என்ற ஒரு திட்டத்தை அறிவித்தது. இந்தத் திட்டத்தின்படி சாகித்திய அகாடமி விருது, ஞானபீட விருது, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் தொல்காப்பியர் விருது, கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது மற்றும் தமிழ் இலக்கியத்திற்கான நோபல் பரிசு ஆகியவற்றில் ஏதேனும் ஒரு விருதினைப் பெற்ற தமிழ் அறிஞர்களுக்கு தமிழகத்திற்குள் அவர்கள் வசிக்கும் மாவட்டத்தில் அல்லது அவர்கள் விரும்பும் மாவட்டத்தில் தமிழக அரசு மூலமாக வீட்டு வசதி வாரியத்தில் உயர் வருவாய் குடியிருப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஒரு நிதியாண்டிற்கு அதிகபட்சம் பத்து விருதாளர்கள் என கடந்த இரண்டு ஆண்டுகளில் இருபது விருதாளர்களுக்கு குடியிருப்புகள் வழங்கப்பட்டு உள்ளதாகத் தெரிகிறது.

இந்தத் திட்டத்தின்படி ஒரு சில விருதுகளை, குறிப்பாக மத்திய அரசின் விருதுகளைப் பெற்றவர்கள் மட்டுமே, ஒரு சாரார் மட்டுமே குடியிருப்பினை பெறும் நிலை ஏற்பட்டுள்ளது. இன்னும் சொல்லப்போனால், திமுக ஆதரவு தமிழறிஞர்கள் மட்டுமே பயன்பெறும் நிலை உள்ளது. இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது மட்டுமல்லாமல் ஒருதலைபட்சமானதும்கூட. தமிழக அரசால் தொன்றுதொட்டு வழங்கப்பட்டு வரும் பாரதிதாசன் விருது, பாரதியார் விருது, பேரறிஞர் அண்ணா விருது, பெருந்தலைவர் காமராசர் விருது போன்றவற்றை பெற்றவர்கள் கனவு இல்லத் திட்டத்தில் புறக்கணிக்கப்பட்டு இருக்கிறார்கள். தமிழ் அறிஞர்கள்மீது பாரபட்சம் காட்டுவது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல.

மாநில சுயாட்சி என்று சொல்லிக் கொண்டு, மாநில விருது பெற்றவர்களை ஒதுக்குவது நியாயமற்ற செயல். பாரதிதாசன் விருது, பாரதியார் விருது, பேரறிஞர் அண்ணா விருது, பெருந்தலைவர் காமராசர் விருது போன்ற தமிழ்நாடு அரசின் விருதுகளைப் பெற்றவர்களும் கனவு இல்லத் திட்டத்தில் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு தமிழ் அறிஞர்களிடையே உள்ளது.

தமிழ் அறிஞர்களின் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்ய வேண்டிய கடமையும், பொறுப்பும் தமிழ்நாடு அரசுக்கு உள்ளது. எனவே, முதல்வர் இதில் உடனடியாகத் தலையிட்டு, தமிழக அரசின் விருதுகளைப் பெற்றவர்களும் கனவு இல்லத் திட்டத்தில் சேர்ந்து பயனடைய வழிவகுக்க வேண்டுமென்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டம் ஆண்டிகள் கூடி மடம் கட்டியது போல் தான் அமையும் என மதுரை விமான நிலையத்தில் ஓ. பன்னீர்செல்வம் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.

சென்னை செல்வதற்காக தேனி மாவட்டம் பெரியகுளத்தில் இருந்து சாலை மார்க்கமாக மதுரை விமான நிலையத்திற்கு வருகை தந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அதிமுக பொதுக்குழு வழக்கு தீர்ப்பு நிலுவையில் உள்ளது குறித்த கேள்விக்கு, நீதிமன்ற தீர்ப்பை தள்ளி வைத்திருக்கிறார்கள். தீர்ப்பு வந்தவுடன் தொடர் நடவடிக்கை தொடரும் என்றார்.

செந்தில் பாலாஜி சிகிச்சையில் இருப்பினும் அவர் மீது உள்ள வழக்கு குறித்த கேள்விக்கு, செந்தில் பாலாஜி குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று சிரித்துக் கொண்டே கேள்வி எழுப்பினார்.

திரைத் துறையில் சமீப காலங்களில் ஜாதியை மையமாக வைத்து விவாதம் செய்வது குறித்த கேள்விக்க?, திரைப்படத்தை நான் இன்னும் பார்க்கவில்லை. மாமன்னன் திரைப்படத்தை பார்த்துவிட்டு செய்தியாளர்களுக்கு பதில் அளிக்கிறேன் என்றார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் அண்ணாமலை செய்தியாளர்களை கடுமையாக விமர்சனம் செய்தது குறித்த கேள்விக்கு, பொதுவாகவே செய்தியாளர்களுக்கு தனிப்பட்ட பிரத்யேகமான உரிமை இருக்கிறது. நாட்டில் நடக்கின்ற பல்வேறு செய்திகள் மற்றும் பிரச்சினைகளை குறித்து மக்களுடைய கவனத்திற்கு கொண்டு வருவதில் அவர்களுக்கு உரிமை இருக்கிறது. இது ஜனநாயக கடமை. அதை மறுப்பவர்களுக்கு அவர்களது மனநிலையை பொறுத்தது.

கடந்த காலங்களில் பலமுறை எதிர்க்கட்சிகள் ஆட்சி அமைக்கின்ற உரிமையை நாடாளுமன்றத்தில் பெற்றும் அவர்களால் ஒழுங்காக வழிநடத்திச் செல்ல முடியாத சூழ்நிலையில் தான் கடந்த காலங்களில் நிகழ்ந்துள்ளது. இதுவும் அதேபோலத்தான் முடியும். ஆண்டிகள் கூடி மடம் கட்டியது போல் இந்த எதிர்க்கட்சிகளின் கூட்டமும் அமையும் என்றார்.