75 ஆண்டுகள் காங்கிரஸ் கொள்ளையடித்ததை விட 9 ஆண்டுகளில் மோடி அதிகம் கொள்ளை: கெஜ்ரிவால்

பிரிட்டிஷார் 250 ஆண்டுகள் கொள்ளையடித்ததை விட, 75 ஆண்டுகள் காங்கிரஸ் கொள்ளையடித்ததை விட மோடி அரசு 9 ஆண்டுகளில் அதிகம் கொள்ளையடித்துவிட்டது என்று அரவிந்த் கெஜ்ரிவால் குற்றஞ்சாட்டியுள்ளார்.

90 தொகுதிகளை கொண்ட சத்தீஷ்கர் சட்டசபைக்கு வரும் நவம்பர் மாதத்திற்குள் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் அரசியல் கட்சிகள் தற்போதே தேர்தல் பணியை தொடங்கிவிட்டன. இந்நிலையில், அம்மாநிலத்தின் பிலஸ்பூர் மாவட்டத்தில் ஆம் ஆத்மி பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆம் ஆத்மி தலைவரும், டெல்லி முதல்-மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்றார். நிகழ்ச்சியில் கெஜ்ரிவால் பேசியதாவது:-

காய்கறிகள், பால், தானியங்களின் என அனைத்தின் விலையும் அதிகரித்து வருகிறது. அத்தியாவசிய பொருட்களின் விலை ஏன் உயருகிறது என்று எப்போதாவது நினைத்திரீகளா? இந்த பொருட்கள் மீது மோடி அதிக அளவில் வரிவிதித்துள்ளார். இது நாடு சுதந்திரம் அடைந்த பிறகு அதிக அளவில் விதிக்கப்பட்ட வரி விதிப்பு. டி, காபி, எண்ணெய் போன்றவற்றையும் மோடி விட்டுவைக்கவில்லை. அதற்கும் அதிக அளவில் வரி விதிக்கப்பட்டுள்ளது. பிரிட்டிஷார் 250 ஆண்டுகள் கொள்ளையடித்ததை விட கடந்த 9 ஆண்டுகளில் மோடி அரசு அதிகம் கொள்ளையடித்துவிட்டது. கடந்த 75 ஆண்டுகளில் காங்கிரஸ் கூட இந்த அளவிற்கு கொள்ளையடிக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.