பத்திர பதிவு சேவை கட்டணங்கள் உயர்வு: தமிழக அரசு அறிவிப்பு!

தமிழ்நாட்டில் பதிவுத்துறையால் மேற்கொள்ளப்படும் ஆவண பதிவு உள்ளிட்ட பனிகளுக்கான சேவை கட்டணங்களை உயர்த்தி தமிழ்நாடு அரசு இப்போது புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் சொத்து வாங்குவது விற்பது உள்ளிட்ட அனைத்திற்கும் ஆவணங்கள் பதிவு செய்யப்படுவது பதிவுத் துறையால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பதிவுத் துறை வழங்கும் ஆவன பதிவு உள்ளிட்டவற்றுக்கான கட்டணங்களைத் தமிழ்நாடு அரசே தீர்மானிக்கும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பதிவுத்துறைக்கான கட்டணங்கள் கடந்த பல ஆண்டுகளாக உயர்த்தப்படாமலேயே இருந்தது. இந்தச் சூழலில் பதிவுத் துறையின் சேவை கட்டணங்களை உயர்த்தி தமிழ்நாடு அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பைத் தமிழ்நாடு அரசு இப்போது வெளியிட்டுள்ளது. இதில் பதிவுத் துறையின் பல சேவை கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டணங்கள் வரும் திங்கள்கிழமை, அதாவது ஜூலை 10ஆம் தேதி முறை அமலுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் ஜோதி நிர்மலாசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில்
கூறியுள்ளதாவது:-

பதிவுத்துறையில் அளிக்கப்படும் சேவைகளுக்கான கட்டணங்கள் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக மாற்றம் செய்யப்படவில்லை. எனவே, பதிவுத்துறையால் வழங்கப்பட்டு வருகின்ற ஆவண பதிவு, பதிவு செய்யப்படும் ஆவணத்தினை பாதுகாத்தல், மின்னணு சாதனத்திலிருந்து ஆவண நகல்கள் வழங்குதல் போன்ற சேவைகளைப் பொருத்து கட்டண வீதங்களை மாற்றியமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனடிப்படையில் பதிவுச்சட்டம், 1908-இன் பிரிவு 78-இல் கட்டண விவர அட்டவணையிலுள்ள 20 இனங்களுக்கான கட்டண வீதங்களும் சில ஆவணப் பதிவுகளுக்கான பதிவு மற்றும் முத்திரை கட்டண வீதங்களும் திருத்தியமைக்கப்பட்டுள்ளன.

எடுத்துக்காட்டாக, ரசீது ஆவணத்திற்குப் பதிவு கட்டணம் ரூ.20/-லிருந்து ரூ.200/- எனவும், குடும்ப நபர்களுக்கு இடையேயான செட்டில்மெண்ட், பாகம் மற்றும் விடுதலை ஆவணங்களுக்கு அதிகபட்ச பதிவு கட்டணம் ரூ.4,000/-லிருந்து ரூ.10,000/- எனவும், அதிகபட்ச முத்திரை தீர்வை ரூ.25,000/-லிருந்து ரூ.40,000/- எனவும் திருத்தி அமைக்கப்பட்டுள்ளது. மேலும், தனி மனை பதிவிற்கான கட்டணம் ரூ.200/-லிருந்து ரூ.1,000/- எனவும், குடும்ப உறுப்பினர்கள் அல்லாத பொது அதிகார ஆவணங்களுக்குப் பதிவுக் கட்டணம் ரூ.10,000/- என்று உள்ளதைச் சொத்தின் சந்தை மதிப்பிற்கு ஒரு சதவீதம் எனவும் மாற்றியமைப்பது உள்ளிட்டவை இதில் அடங்கும். இது 10.07.2023 முதல் நடைமுறைக்கு வருகிறது. இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.