மணிப்பூர் சம்பவம் மிருகத்தனமான செயல்: ஓ.பன்னீர்செல்வம்!

மணிப்பூரில் பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டது கொடூரமான, மிருகத்தனமான, மனித நேயமற்ற செயல் என்று தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

இது தொடர்பாக ஓ.பன்னீர் செல்வம் தனது டுவிட்டர் பதிவில் கூறியுள்ளதாவது:-

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த இரண்டு மாத காலமாக கலவரம் நடைபெற்று வருகின்ற சூழ்நிலையில், ஒரு கும்பல் இரு பழங்குடியினப் பெண்களை நிர்வாணமாக்கி அழைத்துச் செல்லும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருவதைப் பார்க்கும்போது நெஞ்சு பதைபதைக்கிறது. இரு பெண்களும் மர்மக் கும்பலால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தக் கொடூரமான, மிருகத்தனமான, மனித நேயமற்ற செயலுக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மே மாதம் நடைபெற்ற இந்தக் கொடூரச் சம்பவம் இரண்டரை மாதங்களுக்குப் பிறகு வெளி உலகுக்கு வந்துள்ள நிலையில், குற்றவாளிகள் இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பது மிகுந்த வேதனைக்குரிய ஒன்று. குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடித்து அவர்கள்மீது சட்டப்படி உடனடியாக நடவடிக்கை எடுத்து தண்டனைப் பெற்றுத் தரவும், மணிப்பூர் மாநிலத்தில் இயல்பு நிலை திரும்பவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்ட மற்றொரு அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

கடற்கரை – தாம்பரம் புறநகர் இரயிலில் பயணித்து வந்த பழ வியாபாரம் செய்யும் பெண்மணி இராஜேஸ்வரி என்பவர் சைதாப்பேட்டை இரயில் நிலையத்தில் இறங்கியபோது மர்ம நபரால் சரமாரியாக வெட்டப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தி மிகுந்த மன வேதனையை அளிக்கிறது. உயிரிழந்த இராஜேஸ்வரி அவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னை மாநகரத்தின் மையப் பகுதியாகவும், எப்பொழுதும் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியாகவும் விளங்கும் சைதாபேட்டை இரயில் நிலையத்தில் இந்தப் படுகொலை நடைபெற்றுள்ளதும், இந்த வெறிச் செயலைச் செய்தவர் அதே இரயிலில் ஏறி தப்பித்துள்ளதையும் பார்க்கும்போது, தமிழ்நாட்டில் சுதந்திரமாக மக்கள் நடமாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதும், சட்டத்தின் ஆட்சி நடைபெறவில்லை என்பதும் தெளிவாகிறது. தலைநகரம் கொலை நகரமாக மாறியிருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. உயிரிழந்த பழ வியாபாரியின் குடும்பத்திற்கு 25 இலட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்க வேண்டுமென்றும், கொலையாளியை விரைந்து கண்டுபிடித்து, சட்டத்தின் முன்நிறுத்தி, தண்டனைப் பெற்றுத் தர வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு ஓபிஎஸ் குறிப்பிட்டுள்ளார்.