கர்நாடக தேவை போகவே தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுவோம்: டி.கே.சிவகுமார்

கர்நாடக மக்களின் குடிநீர் தேவையை தாண்டி அணையில் மீதம் உள்ள தண்ணீரை தமிழகத்திற்கு திறந்து விடுவோம் என்று கர்நாடக துணை முதல் மந்திரி டி.கே.சிவகுமார் கூறினார்.

தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் மத்திய ஜல்சக்தி துறை மந்திரி கஜேந்திர சிங் செகாவத்தை டெல்லியில் நேற்று சந்தித்தார். அப்போது, காவிரியில் தமிழகத்துக்கு ஜூன், ஜூலை மாதத்திற்கு கிடைக்க வேண்டிய தண்ணீரை உடனடியாக திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிடுமாறு கோரிக்கை வைத்தார். எனவே, கர்நாடக அரசு காவிரியில் 22.54 டி.எம்.சி. தண்ணீரை திறந்துவிட உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தினார்.

இந்நிலையில் கர்நாடக துணை முதல் மந்திரி டி.கே.சிவகுமார் கூறுகையில், கர்நாடக மக்களின் குடிநீர் தேவையை தாண்டி அணையில் மீதம் உள்ள தண்ணீரை தமிழகத்திற்கு திறந்து விடுவோம். எதிர்பார்த்த அளவு மழை இல்லாததால் அணையில் நீர் இருப்பு குறைவாகவே உள்ளது. நீதிமன்ற தீர்ப்புக்கு எப்போதுமே கர்நாடக அரசு கட்டுப்படும். காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும்போது இரு மாநிலங்களுக்கு தேவையான தண்ணீரும் கிடைக்கும் என தெரிவித்தார்.