முஸ்லீம் அமைப்புகளை அச்சுறுத்தவே என்.ஐ.ஏ.ரெய்டு: ஜவாஹிருல்லா கண்டனம்!

முஸ்லீம் அமைப்புகளை அச்சுறுத்தவே என்.ஐ.ஏ.ரெய்டு நடத்தப்படுவதாக கூறியுள்ள ஜவாஹிருல்லா, எஸ்.டி.பி.ஐ. மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் வீட்டில் நடத்தப்பட்ட சோதனைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஜவாஹிருல்லா விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

ஐந்தாண்டுகளுக்கு முன்பு நடை பெற்ற ஒரு கொலை வழக்கு தொடர்பாக எஸ்டிபிஜ கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் நெல்லை முபாரக் வீட்டில் இன்று காலை என்ஐஏ அதிகாரிகள்சோதனை நடத்தி இருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. நாட்டில் மணிப்பூர் பிரச்சனை பற்றி எரிந்து கொண்டிருக்கக் கூடிய சூழ்நிலையில் அதை மடைமாற்றும் நோக்கோடு இந்த சோதனை நடத்தப்படுவதாகவே கருத வேண்டி இருக்கிறது. தமிழகத்தில் திமுக அரசை நெருக்கடிக்கு உள்ளாக்கும் வகையில் அமைச்சர் பெருமக்களை அமலாக்கத் துறை மூலம் அச்சுறுத்தி வரும் ஒன்றிய பாஜக அரசு முஸ்லிம் அமைப்புகள் மற்றும் கட்சிகளின் தலைவர்களைத் தேசிய புலனாய்வு நிறுவனம் (என்ஐஏ) எனப்படும் ஒன்றிய புலனாய்வு அமைப்பு மூலம் அச்சுறுத்தி வருகிறது. நாடு முழுவதும் பலவேறு தீவிரவாத கொடும் செயல்களில் ஈடுபட்டு வரும் சங்கப்பரிவார அமைப்புகளைக் கண்டும் காணாமலும் இருந்து வரும் என்ஐஏ ஜனநாயக ரீதியில் செயல்பட்டு வரும் முஸ்லிம் அமைப்புகளை அச்சுறுத்தும் வகையில் செயல்பட்டு வருவதுகண்டிக்கத்தக்கது.

முஸ்லிம் சமூக, அரசியல் இயக்கங்களின் தலைவர்களை அச்சுறுத்தும் போக்கை என்ஐஏ கைவிட வேண்டும். தமிழ்நாட்டில் நடக்கும் கொலை மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளைத் தமிழ்நாட்டு காவல்துறையே கையாள வேண்டும். அதிமுக-பிஜேபி கூட்டணி முதல்வரான எடப்பாடி ஆட்சிக் காலத்தில் என்ஐஏ விடம் ஒப்படைக்கப்பட்ட வழக்குகளைத் நம் மாநில காவல்துறையே விசாரிக்க வேண்டும் என மனித நேய மக்கள் கட்சி சார்பாகக் கேட்டுக் கொள்கிறேன். சிபிஐ விசாரணை நடத்த அளிக்கப்பட்ட முன் அனுமதியைத் திரும்பப் பெற்றுக் கொண்டது போல் தமிழ்நாட்டில் மாநில அரசின் முன் அனுமதி பெறாமல் என்ஐஏ சோதனைசெய்யலாம் என்ற சட்டத்தைத் திருத்தக் கொண்டு வரத் தமிழ்நாடு அரசு வலியுறுத்த வேண்டும். தமிழகம் அமைதி பூங்காவாகச் செயல்பட்டு வரும் நிலையில் தேவையற்ற பதற்றத்தை உண்டாக்க வேண்டும் என்ற நோக்கில் இந்த சோதனைகள் நடத்தப்படுகின்றன. நெல்லை முபாரக் அவர்கள் வீட்டில் என்.ஐ.ஏ அதிகாரிகளால் நடத்தப்பட்ட சோதனை கடும் கண்டனத்துக்குரியது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.