கோர்ட்டுகளில் அம்பேத்கர் படம் அகற்றப்படாது: உயர்நீதி மன்றம்!

கோர்ட்டுகளில் அம்பேத்கரின் படம் அகற்றப்படாது என்று தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள கோர்ட்டு்களிலும், கோர்ட்டு வளாகங்களிலும் மகாத்மா காந்தி மற்றும் திருவள்ளுவர் ஆகியோரை தவிர வேறு எந்த தலைவரின் சிலைகளும், உருவப்படங்களும் வைக்கப்படக்கூடாது என சென்னை ஐகோர்ட்டின் தலைமைப் பதிவாளர் அனைத்து கோர்ட்டுகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில், கோர்ட்டு, கோர்ட்டு வளாகங்களில் உள்ள சட்டமேதை அம்பேத்கரின் சிலைகளையும், உருவப்படங்களையும் நீக்கும் முயற்சிகள் நடந்தது. இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, இந்த விவகாரம் தொடர்பாக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி கங்காபூர்வாலாவை சந்தித்து பேசினார். அப்போது, அம்பேத்கர் படத்தை கோர்ட்டு, கோர்ட்டு வளாகத்தில் அகற்றக்கூடாது என்ற தமிழக அரசின் நிலைப்பாடு ஏற்கப்பட்டு இருக்கிறது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

கோர்ட்டுகளில் அண்ணல் அம்பேத்கர் புகைப்படம் அகற்றப்படும் என்ற செய்தி பரவியதை தொடர்ந்து, முதல்-அமைச்சரின் அறிவுறுத்தலின்படி, சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி கங்காபூர்வாலாவை சந்தித்து இதுகுறித்து ஆலோசனை மேற்கொண்டார். தலைமை நீதிபதியிடம், அம்பேத்கர் புகைப்படம் அகற்றப்படக்கூடாது என்ற தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டினை சட்டத்துறை அமைச்சர் கடிதம் வழங்கி நேரில் தெரிவித்தார். தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டை கேட்டறிந்த தலைமை நீதிபதி, கோர்ட்டுகளில் எந்த தலைவர்களின் புகைப்படத்தையும் அகற்ற உத்தரவிடப்படவில்லை. தற்போது உள்ள நடைமுறையே தொடரும் என தெரிவித்தார். இந்த தகவல் வழக்கறிஞர் மன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் தெரிவிக்கப்பட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.