நெய்வேலி போராட்டத்தில் ஈடுபட்டபோது காவலில் வைக்கப்பட்டு அன்புமணி விடுவிப்பு!

நெய்வேலி போராட்டத்தில் ஈடுபட்டபோது தடுப்பு காவலில் வைக்கப்பட்டு இருந்த பாமக தலைவர் அன்புமணி விடுவிக்கப்பட்டார்.

நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தை விரிவுபடுத்த விவசாயிகளின் நிலங்கள் கையகப்படுத்தப்படுவதைக் கண்டித்தும், என்எல்சி நிறுவனத்தை வெளியேற வலியுறுத்தியும் நெய்வேலியில் இன்று(வெள்ளிக்கிழமை) பாமக சார்பில் முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட்டது. இதையடுத்து என்எல்சி நிறுவனத்தை முற்றுகையிட தொண்டர்களுடன் புறப்பட்டார் அன்புமணி ராமதாஸ். அப்போது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட காவல் துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. என்எல்சி அலுவலகத்தை முற்றுகையிட முயன்றபோது அன்புமணி கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில் தடுப்பு காவலில் வைக்கப்பட்ட இருந்த பாமக தலைவர் அன்புமணி விடுவிக்கப்பட்டார்.

கடலூர் மாவட்டம் முழுவதும் மாலை 6 மணிக்கு மேல் அரசுப் பேருந்து சேவையை முழுமையாக நிறுத்த போக்குவரத்துக் கழகம் உத்தரவிட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் நடைபெற்ற இந்த போராட்டம் காரணமாக அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

இந்நிலையில் இந்தச் சம்பவம் குறித்து விசாரிப்பதற்காக, தமிழக காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் நெய்வேலி விரைந்திருக்கிறார். இந்த கல்வீச்சு சம்பவத்தில் காயமடைந்த போலீஸார், கடலூர் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதுவரை இந்தச் சம்பவம் தொடர்பாக 400-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், வன்முறையை முற்றிலுமாக கட்டுக்குள் கொண்டுவந்து இயல்புநிலை திரும்ப நடவடிக்கை மேற்கொள்வதற்காக டிஜிபி சங்கர் ஜிவால் நெய்வேலி சென்றுள்ளார். சம்பவம் நடந்த பகுதியையும், காயமடைந்த காவல் துறையினரையும் டிஜிபி சந்திப்பார் என்றும் கூறப்படுகிறது.