யாராக இருந்தாலும் எம்ஜிஆர், ஜெயலலிதா பெயரை சொல்லித்தான் ஆக வேண்டும்: ஜெயக்குமார்

யாராக இருந்தாலும் எம்ஜிஆர், ஜெயலலிதா பெயரை சொல்லித்தான் ஆக வேண்டும். அந்த அளவுக்கு அவர்கள் கொண்டு வந்த திட்டங்கள் காலத்தால் அழிக்க முடியாத ஒரு நிலையில் இருக்கிறது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

சென்னையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம், பாஜக கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, எம்ஜிஆர், ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்களை மீண்டும் வருவதற்காகத்தான் அண்ணாமலை பாத யாத்திரை செல்கிறார் என்று பேசியது குறித்து கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், “ஒரு விஷயத்தை நன்றாக புரிந்து கொள்ளுங்கள். எங்களது தலைவர், தலைவி. காலத்தால் அனைவராலும் உச்சரிக்கப்படக் கூடிய, மாபெரும் தலைவர்கள். அந்தவகையில், உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்களை குறிப்பிட்டு பேசியதை பாராட்ட வேண்டும். ஏனென்றால், யாராக இருந்தாலும் எம்ஜிஆர், ஜெயலலிதா பெயரை சொல்லித்தான் ஆக வேண்டும். அந்தளவுக்கு அவர்கள் கொண்டு வந்த திட்டங்கள் காலத்தால், அழிக்க முடியாத ஒரு நிலையில் இருக்கிறது. அதை நாங்கள் பெருமையாகத்தான் நினைக்கிறோம். ஆனால், அதேநேரத்தில் அந்தத் திட்டங்களை செயல்படுத்துகிற ஒரு அதிமுகவின் அரசாகத்தான் இருக்கும். வேறு யாராலும் அதை செய்ய முடியாது. எனவே, யார் வேண்டுமானாலும் எங்களது தலைவர்களின் புகழ் பாடிக் கொள்ளுங்கள். ஆனால், அவர்களது திட்டங்களை நாங்கள்தான் செயல்படுத்துவோம்” என்று கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், பொழுதுபோகாத காரணத்தால் ஓ.பன்னீர்செல்வமும், டிடிவி தினகரனும் போராட்டம் அறிவித்துள்ளனர். பொழுது போக்கிற்காக கோடநாடு விவகாரத்தை, கையில் எடுத்து ஓபிஎஸ் போராட்டம் நடத்துகிறார். அச்சாணி இல்லாத வண்டியை டிடிவி தினகரன் ஓட்டுகிறார். அது என்றைக்கும் ஓடாது. ஊழலை பற்றி பேச திமுகவுக்கு எந்தத் தகுதியும் இல்லை. ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி திமுக ஆட்சிதான். ஊழலில் திளைத்த திமுகவை மக்கள் மத்தியில் சுட்டிக்காட்டும் பணியை அதிமுக செய்து வருகிறது. ஊழலைச் சுட்டிக்காட்ட அதிமுக என்றும் தயங்கியதில்லை. அண்ணாமலையும் அதனைத் தான் செய்கிறார். அண்ணாமலை அவரது கட்சியை வளர்க்க நடைபயணம் மேற்கொள்கிறார். ஸ்டாலின், உதயநிதி, இன்பநிதி ஆகியோருக்கு நடத்துவதே திமுகவின் முப்பெரும் விழா. உதயநிதியின் மகன் அரசு விழாவில் பங்கேற்பது முறையான செயல் அல்ல என்றார்.

மேலும், “செந்தில்பாலாஜி துறை அமைச்சராக இருந்தபோதும் இல்லாதபோதும் டாஸ்மாக் கடைகளில் வசூல் வேட்டை தொடர்கிறது. டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டிலுக்கு தற்போதும் கூடுதல் தொகை வசூலிக்கின்றனர். ஆதி திராவிடர் நலனுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் கைவைப்பது எந்த விதத்தில் நியாயம்? மகளிர் உரிமைத்தொகை வழங்குவதற்காக போக்குவரத்து விதிமீறலுக்கு தினமும் ரூ.25 கோடி அபராதம் வசூலிக்க உத்தரவிட்டுள்ளனர்.

தமிழக அமைச்சரவையில் இன்னும் அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்கிறார். அவர் தற்போது சிறையில் இருக்கிறார். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஒரு முடிவு எடுக்கப்பட்டால் கையெழுத்திட அந்த ரகசிய கோப்புகள் அமைச்சர்களுக்கு அனுப்பப்படும். இந்த நோட் மிக மிக ரகசியமானது. பி.ஏ, வீட்டில் இருப்பவர்கள் என யாரும் திறந்து பார்க்க முடியாது. இப்போது அந்த ரகசிய கோப்புகள் சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டால் அதனை சிறைத்துறை விதிப்படி அங்குள்ள அதிகாரிகள் பிரித்து படித்து பார்த்துத்தான் கைதிகளுக்கு கொடுக்க வேண்டும். இதனால் அமைச்சராக சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜியால் விதிமுறைகள் மீறப்படுகிறது. இதை வைத்தே சட்டவிதி 356-இன்படி ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார் ஜெயக்குமார்.