ஹரியானாவில் மத ஊர்வலத்தில் வன்முறை: துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி!

ஹரியானாவில் மத ஊர்வலத்தில் ஏற்பட்ட வன்முறையின்போது நடந்த துப்பாக்கி சூட்டில் ஊர்க்காவல் படை வீரர்கள் 2 பேர் பலியாகிவிட்டனர்.

ஹரியானா மாநில விஸ்வ இந்து பரிஷத் அமைப்பு சார்பில் மத ஊர்வலம் ஒன்று நடந்தது. குருகிராம் மாவட்டத்தில் தொடங்கிய இந்த ஊர்வலம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நூ மாவட்டத்திலும் நடந்தது. ஆனால் இந்த மாவட்டத்தின் கேட்லா மோட் பகுதியில் ஊர்வலம் சென்ற போது மற்றொரு பிரிவை சேர்ந்த சில இளைஞர்கள் தடுத்து நிறுத்தினர். பின்னர் ஊர்வலம் சென்றவர்கள் மீது கல்வீசி தாக்குதல் நடந்ததாக தெரிகிறது. இந்த வன்முறையில் இருந்து தப்பிப்பதற்காக ஏராளமானோர் அருகில் உள்ள கோயிலில் தஞ்சமடைந்தனர். இதையடுத்து போலீஸார் அவர்களை பத்திரமாக மீட்டனர். இந்த நிலையில் கலவரக்காரர்கள் போலீஸாரின் வாகனங்கள் உள்பட பல வாகனங்களுக்கு தீவைத்தனர். மேலும் தங்களிடம் இருந்த துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதில் ஊர்க்காவல் படை வீரர்கள் 2 பேர் மீது குண்டு பாய்ந்து அவர்கள் உயிரிழந்தனர். போலீஸ் டிஎஸ்பி உள்ளிட்ட 12 போலீஸார் காயமடைந்தனர். இதில் 2 பேரின் நிலை கவலைக்கிடமான வகையில் உள்ளது.

கலவரம் கட்டுக்கடங்காமல் போனதை அடுத்து போலீஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி வன்முறையாளர்களை கலைத்தனர். இந்த வன்முறையை தொடர்ந்து அந்த மாவட்டம் முழுவதும் பெரும் பரபரப்பும் பதற்றமும் நிலவி வருகிறது. எனவே மாவட்டம் முழுவதும் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்று வரை இணையதள சேவைகளும் முடக்கப்பட்டன. நூ மாவட்டத்தில் நடந்த வன்முறை அண்டை நகரமான குருகிராமின் சோனாவில் பரவியது. அங்கும் வாகனங்களும் கடைகளும் தீவைத்து கொளுத்தப்பட்டன. நூ மாவட்டத்திற்கு போலீஸார் கூடுதலாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அனைவரும் கலவரத்தை விட்டுவிட்டு அமைதியாக இருக்குமாறு அந்த மாநில உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.