டெல்லி அவசர சட்ட மசோதாவுக்கு ஆம் ஆத்மி கடும் எதிர்ப்பு!

டெல்லி அவசர சட்ட மசோதா மாநிலங்களவையில் மசோதா தோற்கடிக்கப்படும் என ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி. சஞ்சய் சிங் நம்பிக்கை தெரிவித்தார்.

டெல்லி அரசின் அதிகாரத்தை குறைக்கும் வகையில் மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது. இந்த அவசர சட்டத்துக்கு மாற்றாக மக்களவையில் இன்று சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. டெல்லி தேசிய தலைநகர் பிரதேச அரசு சட்டத்திருத்த மசோதா- 2023 என்ற இந்த மசோதாவை உள்துறை இணை மந்திரி நித்யானந்த ராய் அறிமுகம் செய்து பேசினார்.

இந்த மசோதாவுக்கு ஆம் ஆத்மி கட்சி கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளது. ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் ராகவ் சத்தா கூறுகையில், இந்த மசோதா முந்தைய அவசரச் சட்டத்தை விட மோசமானது என்றும், நமது ஜனநாயகம், அரசியலமைப்பு மற்றும் டெல்லி மக்களுக்கு எதிரானது என்றும் தெரிவித்தார். இதுவரை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்த மசோதாக்களிலேயே மிகவும் ஜனநாயக விரோத பேப்பர் என்றும், இது ஜனநாயகத்தை அதிகாரத்துவம் மூலம் மாற்றிவிடும் எனவும் குறிப்பிட்டார். இது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட டெல்லி அரசாங்கத்திடம் இருந்து அனைத்து அதிகாரங்களையும் பறித்து ஆளுநர் மற்றும் அதிகாரவர்க்கத்திடம் ஒப்படைக்கிறது. இது இந்தியாவின் கூட்டாட்சி அமைப்பு, ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பின் மீதான தாக்குதல் ஆகும். ஐ.என்.டி.ஐ.ஏ. கூட்டணியின் அனைத்து கட்சிகளும் இந்த மசோதாவை எதிர்க்கும் எனவும் ராகவ் சத்தா தெரிவித்தார்.

மக்களவையில் இந்த மசோதாவை மத்திய அரசால் நிறைவேற்ற முடிந்தாலும், மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளுக்கு போதிய உறுப்பினர்கள் இருப்பதால் நிச்சயம் தோற்கடிக்கப்படும் என ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சஞ்சய் சிங் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்நிலையில் அவசர சட்டத்திற்கு மாற்றாக உருவாக்கப்பட்ட மசோதா (டெல்லி சேவைகள் மசோதா) இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம் இந்த மசோதாவிற்கு ஆதரவளித்துள்ளது. இக்கட்சி மத்திய அரசுக்கு ஆதரவளிப்பதால், மசோதா பாராளுமன்ற மாநிலங்களவையில் மிகச் சுலபமாக நிறைவேறும். மாநிலங்களவையின் முழு பலம் 245. ஆனால் 7 இடங்கள் காலியாக உள்ளன. தற்போதுள்ள 238 உறுப்பினர்களும் அன்றைய தினம் வாக்களித்தால், சபையில் பாதி பெரும்பான்மை பெற 120 ஓட்டு தேவைப்படும். பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மாநிலங்களவையில் தனிப்பெரும்பான்மை இல்லை. இந்நிலையில், அங்கு 9 உறுப்பினர்களை கொண்ட ஒடிசாவின் ஆளும் கட்சியின் இந்த ஆதரவின் மூலம் இந்த மசோதா நிறைவேறி விடும். மாநிலங்களவையில் 9 உறுப்பினர்களையும், மக்களவையில் 22 உறுப்பினர்களையும் கொண்ட ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி, முக்கியமான இந்த மசோதாவில் அரசுக்கு ஆதரவளிப்பதாக ஏற்கனவே அறிவித்துள்ளது.

பா.ஜ.க. மற்றும் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில், கூட்டணி கட்சிகளுக்கு 103 உறுப்பினர்கள் உள்ளனர். தவிர 5 நியமன உறுப்பினர்கள் மற்றும் 1 சுயேட்சை உறுப்பினரின் ஆதரவிலும் ஆளும் பா.ஜ.க. நம்பிக்கை வைத்திருக்கிறது. பிஜூ ஜனதா தளம் மற்றும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆதரவுடன், பா.ஜ.க. தலைமையிலான அரசுக்கு 127 உறுப்பினர்கள் உள்ளனர். மாநிலங்களவையில் தலா ஒரு உறுப்பினரை கொண்ட சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி மற்றும் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவையும் மசோதாவை ஆதரிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. எதிர்க்கட்சி குழுவில் உள்ள 26 கட்சிகளில், குறைந்தபட்சம் 18 கட்சிகள் மாநிலங்களவையில் முன்னிலையில் உள்ளன. அவை மொத்தமாக 101 உறுப்பினர்களை கொண்டுள்ளன. 26 கட்சிகளை மட்டுமே கொண்ட எதிர்க்கட்சி கூட்டணியான I.N.D.I.A.வைச் சேர்ந்த 109 உறுப்பினர்கள் மற்றும் கபில் சிபல் போன்ற சில சுயேட்சை உறுப்பினர்கள் இந்த மசோதாவுக்கு எதிராக வாக்களிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தவிர, பாரத் ராஷ்டிர சமிதி (முன்னாள் தெலுங்கானா ராஷ்டிர சமிதி) தனது 7 மாநிலங்களவை உறுப்பினர்களிடமும் மசோதாவுக்கு எதிராக வாக்களிக்குமாறு உத்தரவிட்டுள்ளது. இதுபோன்ற சூழ்நிலை நிலவுவதால் பா.ஜ.க.விற்கு மசோதா நிறைவேற்றுதல் சுலபமாக அமையும் என அரசியல் வல்லுனர்கள் கணிக்கின்றனர். பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தையும் பிஜூ ஜனதா தளம் எதிர்க்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.