வளையமாதேவி கிராமம் செல்ல முயன்ற மார்க்சிஸ்ட் எம்எல்ஏக்கள் தடுத்து நிறுத்தம்!

வளையமாதேவி கிராமத்துக்குச் செல்ல முயன்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏக்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதனைத் தொடர்ந்து அக்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி 2 சுரங்க விரிவாக்கப் பணிக்காக மேல்வளையமாதேவி, கீழ்வளையமாதேவி, அம்மன் குப்பம், கரிவட்டி கத்தாழை, மும்முடி சோழகன், ஆதனூர் உள்ளிட்ட கிராமங்களில் நிலங்களை கையகப்படுத்திய என்எல்சி இந்தியா நிறுவனம், கடந்த 6 நாட்களாக வளையமாதேவி பகுதியில் பரவலாறு வாய்க்கால் வெட்டும் பணியை மேற்கொண்டு வருகிறது. அப்பகுதியில் பலத்த போலுஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நிலையில், வாய்க்கால் வெட்டும் பணிக்கு விவசாயிகள் சங்கங்கள், பல்வேறு அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கீழ்வேளூர் தொகுதி எம்எல்ஏ நாகைமாலிக், கந்தர்வகோட்டை தொகுதி எம்எல் ஏ சின்னதுரை, அக்கட்சியின் கடலூர் மாவட்ட செயலாளர் மாதவன். ரமேஷ்பாபு மற்றும் நிர்வாகிகள் இன்று சேத்தியாத்தோப்பு குறுக்கு ரோட்டு பகுதிக்கு வந்தனர். பின்னர் அங்கிருந்து வளையமாதேவி கிராமத்துக்குச் சென்று விவசாயிகளை சந்திக்க புறப்பட்டனர். அப்போது சேத்தியாதோப்பு டி.எஸ்.பி., ரூபன் குமார் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தி அங்கு செல்ல அனுமதி இல்லை என்று தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து குறுக்கு ரோடு பகுதியிலேயே அக்கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

பின்னர் எம்எல்ஏக்கள் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”என்எல்சி நிர்வாகத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளை சந்திக்க செல்ல முயன்றோம். எங்களை என்எல்சி நிர்வாகத்தின் ஆதரவாக செயல்படும் காவல் துறையினர் அங்கு செல்ல அனுமதி மறுத்து விட்டார்கள். என்எல்சி நிர்வாகம் இரண்டாவது சுரங்க விரிவாக்க பணிக்காக எடுக்கப்பட்ட விவசாயிகளின் விளை நிலங்களில் வளர்ந்துள்ள நெல் பயிர்களை அறுவடைக்கு முன்னதாக அழித்தது வேதனை அளிக்கிறது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் சட்டமன்றத்தில் என்எல்சி விவகாரம் குறித்து இரண்டு எம்எல்ஏக்களும் பேசியுள்ளோம். இதற்கு மாநில அரசு பதிலளிக்க வேண்டும்.

நிலம் வீடு மனை கொடுத்த விவசாயிகளுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும். லாபத்தில் பங்கு, சிஎஸ்ஆர் நிதியிலிருந்து இங்கு உள்ள விவசாயிகளுக்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு ரூபாய் கூட செலவு செய்யாமல் பிஜேபி ஆதரவான குஜராத் போன்ற மாநிலங்களில் செலவிடப்படுகிறது. இது மிகவும் வருத்தம் அளிக்கிறது. இவை அனைத்தையும் கண்டித்து வரும் 8 தேதி சேத்தியாதோப்பு குறுக்கு ரோடு, விருத்தாசலம், கடலூர் உள்ளிட்ட பகுதியில் மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்” என்றனர்.