திண்டுக்கல் திமுக ஒன்றிய செயலாளர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!

திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் வீரா. சாமிநாதனுக்கு சொந்தமான வீடு, தோட்டத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் உள்ள திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் வீரா.சாமிநாதன் இல்லத்தில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்தபோது டாஸ்மாக் கடை மற்றும் பார்களில் பணம் வசூலிக்கும் வேலையை வீரா.சாமிநாதன் செய்து வந்ததாக கூறப்படுகிறது. அமலாக்கத்துறை சோதனைக்கு பின்னர் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள நிலையில் சோதனையின் போது சிக்கிய ஆவணங்களின் அடிப்படையில் தற்போது திமுக ஒன்றிய செயலாளர் சாமிநாதன் வீட்டில் சோதனை நடைபெறுவதாக கூறப்படுகிறது.

வீரா.சாமிநாதனுக்கு சொந்தமாக வெளிமாநிலங்களில் நிதி நிறுவனங்கள் மற்றும் பழனியில் தனியார் பள்ளி ஆகியவை உள்ளது. செந்தில் பாலாஜியின் கைதுக்கு பின்னர் அவரது ஆதரவாளர் என்ற சந்தேகத்தின்பேரில் சாமிநாதனின் ஆசிமேடு பகுதியில் உள்ள இல்லத்திலும் சமத்துப்பட்டியில் உள்ள அவரது பண்ணைவீட்டிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.