மணிப்பூரில் மீண்டும் வெடித்த கலவரம்: 3 பேர் சுட்டுக்கொலை!

மணிப்பூரில் நேற்று இரவு மீண்டும் புதிதாக வெடித்தக் கலவரத்தில் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். உயிரிழந்தவர்கள் மூவரும் மைத்தேயி சமூகத்தைச் சேர்ந்தவர்களாவர். இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக குகி சமூகத்தைச் சேர்ந்தவர்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.

க்வாக்டா பகுதியில் தான் இந்தக் கலவரம் நடந்துள்ளது. கலவரத்தால் ஊரடங்கு தளர்த்தப்பட்ட பல்வேறு பகுதிகளிலும் அது வாபஸ் பெறப்பட்டுள்ளது. குறிப்பாக இம்பால் கிழக்கு மற்றும் இம்பால் மேற்கு பகுதிகளில் தளர்த்தப்பட்ட ஊரடங்கு திரும்பப்பெறப்பட்டுள்ளது.

இது குறித்து பிஷ்ணுபூர் காவல்துறை தரப்பில், “மத்தியப் படைகளின் பாதுகாப்பு வளையத்தில் இருந்த பாதுகாப்புப் பகுதியில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் குவாக்டா பகுதிக்குள் கலவரக்காரர்கள் நுழைந்தனர். பாதுகாக்கப்பட்ட பகுதியைத் தாண்டி வந்த சிலர் மைத்தேயி மக்கள் வசிக்கும் பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தியதைத் தொடர்ந்து மீண்டும் கலவரம் மூண்டுள்ளது. இதில் மைத்தேயி சமூகத்தைச் சேர்ந்த மூன்று பேர் கொல்லப்பட்டனர். குகி சமூகத்தினர் வீடுகள் பல எரிக்கப்பட்டுள்ளன. சம்பவ பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மணிப்பூரின் பிஷ்ணுபூர் மாவட்டத்தில் வியாழக்கிழமையன்று ஆயுதப் படைகளுக்கும் மைத்தேயி சமூகத்தினருக்கும் இடையே இரண்டு நாட்களுக்கு முன்னர் நடந்த மோதலில் 17 பேர் காயமடைந்தனர். இந்நிலையில் நேற்று வெடித்தக் கலவரத்தில் 3 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதுதவிர கங்வாய், போக்சாவ் பகுதிகளில் ஏற்பட்ட கலவரங்களை அடக்கப் போலீஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். மைத்தேயி சமூகப் பெண்கள் சோதனைச் சாவடியைத் தாண்டிய நுழைய முயன்றதால் பாதுகாப்புப் படையினர் கண்ணீர் புகை குண்டுக்ளை வீசி தாக்குதல் நடத்தியதாகத் தெரிகிறது.