தமிழக மீனவர்கள் 10 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை!

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழ்நாடு மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்டையினர் கைது செய்துள்ளனர்.

இந்திய கடல் எல்லைக்குள் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளது. எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி கைது செய்யும் இலங்கை கடற்படை, மீனவர்களின் படகுகளை உடைத்து வலைகளை அறுப்பதையும் வாடிக்கையாக கொண்டுள்ளது. இதனால், மீனவர்களுக்கு பெரும் நஷ்டமும் ஏற்படுகிறது.

இந்த நிலையில், எல்லை தாண்டி மீன் பிடித்ததாக நாகை மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. நாகை துறைமுகத்தில் இருந்து ஒரு படகில் சென்ற 10 மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ளது. கைது செய்யப்பட்ட 10 மீனவர்களும் திரிகோணமலை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக கடந்த மாதம் 9 ஆம் தேதி ராமேஸ்வரத்தில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்ற தமிழக மீனவர்கள் 15 பேரை இலங்கை கடற்படை கைது செய்து இருந்தது. மீனவர்களின் 2 படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்தது. இந்த நிலையில், அடுத்த சில வாரங்களில் நாகை மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ளது மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.