காங்கிரஸ் முக்கிய தலைவர் ராகுல் காந்தி நாளை உதகை வருகிறார்!

காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர் ராகுல் காந்தி நாளை உதகை வருகிறார்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தேசியத் தலைவர் ராகுல்காந்தி புதுடெல்லியில் இருந்து நாளை காலை 9:15 மணிக்கு கோவை விமான நிலையத்துகு வருகிறார். கோவையில் இருந்து காலை 11 மணிக்கு காரில் உதகை சென்றடையும் அவர், அங்குள்ள தனியார் விடுதியில் தங்கி சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார். மதிய உணவை முடித்த பின்பு 1 மணி அளவில் உதகை அருகே முத்தநாடு மந்து என்னும் தோடர் பழங்குடியினர் கிராமத்திற்கு சென்று அவர்களோடு கலந்துரையாடுகிறார். பின்னர் கூடலூர் வழியாக வயநாடு செல்கிறார்.

இதற்கிடையே அவர் முதுமலை யானைகள் முகாமுக்கு செல்ல உள்ளதாகவும் கூறப்படுகிறது. ராகுல்காந்தி வருகையையொட்டி, கோவை மாவட்டக் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், காங்கிரஸ் நிர்வாகிகளுடன் எஸ்.பி.பத்ரிநாராயணன் இன்று பிற்பகல் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

ராகுல் காந்தி வருகையையொட்டி, கோவையில் பலத்த பாதுகாப்பு ஏற்படுத்தப்பட உள்ளதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.