விளையாட்டு போட்டிகளில் தமிழகம் முன்னணியில் உள்ளது: உதயநிதி ஸ்டாலின்

பல்வேறு துறைகளில் வளமான பாரம்பரியத்தை வளர்த்து வரும் தமிழகம், விளையாட்டு போட்டிகளிலும் தொடர்ந்து முன்னணியில் உள்ளது என, விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, தமிழ்நாடு சர்பிங் அசோசியேஷன், இந்திய சர்பிங் பெடரேஷன் சார்பில் சர்வதேச சர்பிங் ஓபன் விளையாட்டு போட்டி நேற்று தொடங்கியது. ஆக.20 வரை கோவளம், மாமல்லபுரம் கடல் பகுதியில் இப்போட்டி நடைபெற உள்ளது. இதற்கான தொடக்க விழா கோவளம் கடற்கரையில் நேற்று நடைபெற்றது. தமிழ்நாடு சர்பிங் அசோசியஷேன் தலைவர் அருண் வாசு தலைமை தாங்கினார். பிரபல கிரிக்கெட் வீரர் ஜான்டி ரோட்ஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத் துறை செயலர் அதுல்ய மிஸ்ரா, விளையாட்டு மேம்பாட்டு ஆணையர் மேகநாத ரெட்டி, செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அலைச் சறுக்கு போட்டிகளை தொடங்கி வைத்து முதற்கட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி பேசியதாவது:-

பல்வேறு துறைகளில் வளமான பாரம்பரியத்தை வளர்த்து வருகிற தமிழ்நாடு. தற்போது விளையாட்டு போட்டிகளிலும் தொடர்ந்து முன்னணியில் உள்ளது. ஹாக்கி, கபடி, கிரிக்கெட், டென்னிஸ், ஸ்குவாஷ், கைப்பந்து, வாள் வீச்சு, சதுரங்கம் ஆகியவற்றில் தமிழ்நாடு வீரர்கள் தங்களது திறமைகளை இந்திய அளவிலும், உலக அளவிலும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

ஒலிம்பிக் விளையாட்டுகளில் ஒன்றான சர்பிங் தற்போது இந்திய அளவிலும் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை பெற்றுள்ளது. அதை ஊக்குவிக்கும் விதமாக, தமிழ்நாடு அரசின் சார்பில் இந்த போட்டிகளை நடத்த ரூ.2 கோடியே 68 லட்சம் வழங்கி உள்ளோம். இந்தியாவில் முதல் முறையாக நடைபெறும் இந்த போட்டியில் 10 நாடுகளைச் சேர்ந்த 56 சர்வதேச வீரர்கள், 18 வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இவர்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 வீரர்கள், 5 வீராங்கனைகள் அடங்குவர். இந்த போட்டிகளில் வெற்றி பெறுவோர் ஒலிம்பிக்சில் பங்கேற்று பதக்கம் வெல்ல வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.