தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மீதான சொத்து குவிப்பு வழக்கு இன்று விசாரணை!

அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆகியோரை விடுத்த உத்தரவுக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவில்லை. இதனால் நீதிபதியே அதிரடி முடிவை எடுத்துள்ளார். வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.

தமிழ்நாட்டில் 2011ஆம் ஆண்டு ஜெயலலிதா தலைமையிலான அரசு அமைந்த போது திமுக முன்னாள் அமைச்சர்கள் பலரின் மீது லஞ்ச ஒழிப்புத் துறை சொத்து குவிப்பு வழக்கு தொடர்ந்தது. அந்த வகையில் திமுக ஆட்சி நடந்த 2006 – 2011 கால கட்டத்தில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசு, அவரது மனைவி மணிமேகலை மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை 2012ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்தது. ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடைபெற்றது. இதனிடையே வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி தங்கம் தென்னரசு மற்றும் அவரது மனைவி வழக்கு தொடர்ந்தனர். அதில், அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக தங்கள் மீது இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், இருவரையும் வழக்கில் இருந்து விடுவித்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தீர்ப்பளித்தது.

இதுபோலவே அப்போதைய திமுக ஆட்சிகாலத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சராக இருந்த கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், அவரது மனைவி ஆதிலெட்சுமி ஆகியோர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கின் விசாரணை விருதுநகர் நீதிமன்றத்தில் நடந்தது. தங்கம் தென்னரசு போலவே ராமச்சந்திரன் மற்றும் அவரது மனைவியும் தங்களை இவ்வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டுமென மனுதாக்கல் செய்தனர். தன்னை பழிவாங்குவதற்காக புனையப்பட்ட வழக்கு இது என அவரும் மனுதாக்கல் செய்தார். இதனை ஏற்ற நீதிபதி திலகம், வழக்கில் போதிய ஆதாரம் இல்லாததால், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மற்றும் அவரது மனைவியையும் வழக்கில் இருந்து விடுவித்தார்.

அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆகியோரை விடுத்த உத்தரவுக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவில்லை. இதனால் அதிரடி காட்டிய உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், இரு சீராய்வு மனுக்களையும் தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்துள்ளார். இந்த இரண்டு வழக்குகளும் இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளன.