அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனுக்கு எதிரான வழக்கில் நீதிமன்றம் அதிரடி!

அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனுக்கு எதிரான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

அமைச்சர் தங்கம் தென்னரசு 2006 – 11 திமுக ஆட்சி காலத்தில் பள்ளி கல்வித் துறை அமைச்சராக பணியாற்றினார். இதேபோல வருவாய் துறை அமைச்சராக கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பதவி வகித்தார். அதிமுக ஆட்சி அமைந்த பிறகு இருவர் மீதும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை 2012ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்தது. தங்கம் தென்னரசு மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான வழக்கு ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றத்தில் நடந்தது அரசியல் பழிவாங்கல் காரணமாக இவ்வழக்கு தொடரப்பட்டுள்ளது எனக் கூறி தங்களை விடுவிக்க வேண்டுமென தங்கம் தென்னரசு மனுதாக்கல் செய்தார். இதனையடுத்து அவரை சொத்து குவிப்பு வழக்கில் இருந்து நீதிமன்றம் கடந்த 2022 டிசம்பர் மாதம் விடுவித்தது. அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரனுக்கு எதிரான வழக்கு விருதுநகர் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், அவரும் தன்னை விடுவிக்கக் கோரி மனுதாக்கல் செய்தார். வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லை என சுட்டிக்காட்டிய நீதிமன்றம், ராமச்சந்திரனையும் வழக்கில் இருந்து கடந்த மாதம் விடுவித்தது.

இதனை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத் துறை மேல்முறையீடு செய்யாத நிலையில், இவ்வழக்கை தாமாக முன்வந்து சீராய்வு மனுவாக ஏற்றுக்கொண்டார் நீதிபதி ஆனந்த் வெங்கடேசன். இவ்வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, வழக்கு விசாரணையில் பின்பற்றப்பட்ட நடைமுறைகள் தவறானவையாக உள்ளன என்றும், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ராமச்சந்திரன் இருவரையும் விடுவித்த உத்தரவுகள் ஒரே மாதிரியாக உள்ளன, லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளின் நிலைபாடு 2021ம் ஆண்டுக்குப் பிறகு மாறி இருப்பதை காண முடிகிறது என்று குறிப்பிட்டதோடு, இந்த விஷயத்தில் நீதிமன்றம் கண்ணை மூடிக்கொண்டு இருக்காது என்று காட்டமாக தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட அரசு தலைமை வழக்கறிஞர், விசாரணை அதிகாரியின் விசாரணை முறையில் எந்தத் தவறும் இல்லை என்றும், லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் களங்கப்படுத்தப்படுவதாகவும் தெரிவித்தார்.
ஆனால் யார் அதிகாரத்திற்கு வந்தாலும் வழக்கை நீர்த்துப் போகவே செய்கின்றனர் என்று குற்றம்சாட்டிய நீதிபதி, நீதிமன்றம் குறிப்பிட்ட ஒரு கட்சிக்கோ, அதில் தொடர்புடையவர்களுக்கோ, அரசுக்கோ உரித்தானது அல்ல, ஏழை மற்றும் எளிய மக்களுக்கும் குப்பனுக்கும் சுப்பனுக்கும் சொந்தமானது என்றும் கூறினார்.

இவ்வழக்கில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆகியோரும் லஞ்ச ஒழிப்புத் துறையும் செப்டம்பர் 20ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என உத்தவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.

முன்னதாக அமைச்சர் பொன்முடிக்கு எதிரான சொத்துக் குவிப்பில் அவர் வேலூர் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார். இந்த வழக்கையும் தாமாக முன்வந்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரணைக்கு எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.