கோவை வரும் ஆளுநருக்கு எதிராக இன்று கருப்புக்கொடி போராட்டம் அறிவிப்பு!

கோவை வரும் ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து இன்று தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கருப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். நீட் விலக்கு உள்ளிட்ட பல மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் கிடப்பில் வைத்துள்ள ஆளுநரை கண்டித்து போராட்டம் நடைபெற உள்ளது.

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் இன்று பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது. இந்நிகழ்வில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொள்ள உள்ள நிலையில் முற்போக்கு அமைப்புகளின் சார்பில் ஆளுநருக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம் நடத்த உள்ளதாக தந்தை பெரியார் திராவிட கழக பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன் செயதியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார்.

கு.இராமகிருட்டிணன் கூறுகையில், தமிழ்நாடு சட்டமன்றத்தில் தமிழ்நாடு அரசால் ஒருமனதாக தீர்மானிக்கப்பட்ட நீட் தேர்விற்கு எதிரான மசோதாக்கள் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு எதிரான மசோதாக்கள் இவற்றையெல்லாம் அனுமதிக்காமல் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கிடப்பில் போடுவதோடு மட்டுமல்லாமல் இவற்றையெல்லாம் நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன் என்று வெளிப்படையாகவும் தமிழ்நாட்டு மக்களுக்கே எதிராகவும் பேச துவங்கியுள்ளார். தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் எந்த மசோதாக்களுக்கும் அவர் அனுமதி வழங்குவதில்லை. தற்போது தமிழ்நாடு அரசின் கல்விக் கொள்கையில் மாநில அரசு வகுத்திருக்கக்கூடிய கல்வித் திட்டத்தை பல்கலைக்கழகங்கள் இயற்கை வேண்டிய அவசியம் இல்லை என வெளிப்படையாக பல்கலைக்கழகங்களுக்கு ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழ் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாடு அரசு தமிழ்நாடு கல்விக் கொள்கையை கூட வகுக்க முடியாத நிலைக்கு ஆளுநர் தள்ளுகிறார். அதேபோல் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு குழுவிற்கு யாரை தலைவராக நியமிக்க வேண்டும் என்பதையும் தமிழ்நாடு அரசு முடிவு எடுக்க முடியாது என்ற நிலையில் தமிழக மக்களையும் தமிழ்நாட்டையும் ஆளுநர் வஞ்சித்துக் கொண்டிருக்கிறார். தமிழ்நாட்டின் வளர்ச்சியில் ஆளுநர் தடையாக இருக்கிறார்.

இந்நிலையில் கோவையில் உள்ள பாரதியார் பல்கலைக்கழக பட்டம் அளிப்பு விழாவிற்கு ஆளுநர் வந்தால் லாலி ரோடு பகுதியில் கருப்புக் கொடி போராட்டத்தை நடத்துவோம். தமிழ்நாடு திராவிட இயக்கங்களால் அடைந்துள்ள வளர்ச்சியை அவர்களால் பொறுத்துக் கொள்ள முடியாமல் அதனை தடை செய்ய வேண்டும் என்ற திட்டத்தோடு ஆளுநர் இயங்கிக் கொண்டிருக்கிறார். ஆளுநர் பாஜகவின் செய்தி தொடர்பாளர் போலவும் மாநில தலைவர் போலவும் இயங்கிக் கொண்டிருக்கிறார். பாஜகவின் திட்டங்களையும் நோக்கங்களையும் தமிழ்நாட்டில் நிறைவேற்றுவதும் பாஜகவை இங்கு வளர்ப்பதற்காகவும் தான் மக்கள் பணத்தில் உருவாகிய ராஜ் பவனில் அமர்ந்து கொண்டு பாஜகவில் ஆதரவாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் எனத் தெரிவித்தார்.

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவுக்கு வரும் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவிக்கு கருப்புக் கொடி காட்டப்போவதாக தந்தை பெரியார் திராவிடர் கழகம் அறிவித்ததை அடுத்து ஆளுநருக்கு இயல்பான பாதுகாப்பை விட அதிகமாக வழங்க காவல்துறை முடிவு செய்துள்ளது. இதனையடுத்து, கோவையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.