வீரமுத்துவேலும், நானும் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்: ராமதாஸ்!

சந்திரயான் 3 திட்டத்தின் கீழ் நிலவின் தென் துருவத்தில் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக தரையிறங்கியதற்கு வாழ்த்து தெரிவித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், இந்த திட்டத்தின் இயக்குநரான வீரமுத்துவேலும், தானும் விழுப்புரம் காரர்கள் என்பதில் பெருமைப்படுவதாகவும் கூறியுள்ளார்.

சந்திரயான் 3 திட்டம் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. இதுவரை எந்த வல்லரசு நாடுகளாலும் செல்ல முடியாத நிலவின் தென் துருவத்திற்கு நமது இஸ்ரோவின் சந்திரயான் விண்கலம் சென்றதுடன், அங்கு விக்ரம் லேண்டரையும் வெற்றிகரமாக தரையிறக்கியுள்ளது. கடந்த சந்திரயான் 2 திட்டத்தில் இந்த மிஷனில் தான் நாம் தோற்றோம். ஆனால் தற்போது விக்ரம் லேண்டரை நிலவின் தென் துருவத்தில் நிலை நிறுத்தியதன் மூலமாக விண்வெளி வல்லரசாக இந்தியா புதிய அவதாரத்தை எடுத்திருக்கிறது.

இந்த வெற்றிக்கு பல அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர். அந்த வகையில் ராமதாஸ் ஒரு வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

ஸ்ரீஹரிஹோட்டாவில் இருந்து ஜூலை 14-ஆம் தேதி தொடங்கிய சந்திரயான் 3 விண்கலத்தின் பயணம் 41 நாட்களுக்குபின்னர் நிலவின் தென் துருவத்தில் நிறைவடைந்து பெரும் சாதனையாக மாறியுள்ளனது. பதற்றம் நிறைந்த கடைசி 19 நிமிடங்களுக்கு பிறகு வெற்றிகரமாக தரையிறங்கல் நிகழ்வு நடைபெற்றது. இந்த வெற்றியால் விண்வெளி ஆராய்ச்சியில் சாதனை படைத்த நாடுகளின் பட்டியலில் இந்தியாவின் பெயரும் பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நிலவில் தடம் பதித்த உலகின் 4-வது நாடு என்கிற பெருமையையும், நிலவின் தென் துருவத்திற்கு சென்ற முதல் நாடு என்கிற பெயரையும் இந்தியா பெற்றிருக்கிறது.

இந்த சாதனையை நிகழ்த்திக் காட்டிய இஸ்ரோ விஞ்ஞானிகள் குழுவின் தலைவரான வீரமுத்துவேல் எங்கள் விழுப்புரம் மாவட்ட மண்ணின் மைந்தர் என்பதில் எங்களுக்கு கூடுதல் பெருமை ஆகும். சாதனைக்கு காரணமான அனைவருக்கும் எனது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். நிலவுக்கு மனிதனை அனுப்பும் இந்தியாவின் முயற்சியும் வெற்றியடைய எனது வாழ்த்துகளை முன்கூட்டியே கூறிக்கொள்கிறேன். இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.